இராகவன் கருப்பையா
அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் நாட்டின் 16ஆவது பொதுத் தேர்தலில் 3ஆவது அணியொன்று வேண்டும் என காத்திருப்போரை மகிழ்ச்சிபடுத்துவதற்கானத் தருணம் தற்போது உருவாகியுள்ளது.
அம்னோவுக்குக் கடுமையானப் போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பெர்சத்து கட்சி தற்பொழுது தலைமைத்துவப் போராட்டத்தில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.
அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு எதிர்கட்சிகளின் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுமேயானால் அநேகமாக பெர்சத்து கட்சியைச் சேர்ந்த ஒருவர்தான் பிரதமராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் முஹிடின் யாசின் மீண்டும் ஒரு முறை பிரதம மந்திரியாவதற்குத் துடித்துத் கொண்டிருக்கும் வேளையில் அதன் துணைத் தலைவர் ஹம்ஸா ஸைனுடினின் புகழ் ஓங்கத் தொடங்கியது.
நிலைமை தற்பொழுது பூதாகரமாகி, ஹம்ஸாவும் அவருடைய சகாக்களும் கட்சியிலிருந்தே தூக்கியெறியப்பட்டது அனைவரும் அறிந்ததே.
பெர்சத்துவின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 18 பேர்கள் தனக்கு ஆதரவாக உள்ளனர் என்று கூறும் ஹம்ஸா, அக்கட்சிக்குத் திரும்பப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.
இத்தகைய சூழலில் அம்னோவும் பாஸ் கட்சியும் அவர்களைக் கவர்ந்திழுப்பதற்கு வலை விரித்துள்ளதும் மக்கள் அறியாமல் இல்லை.
எனினும் அந்த இனிப்புகளுக்கெல்லாம் மசியாமல், அவரைப் போலவே வஞ்சிக்கப்பட்டுள்ள, ஆளுமைமிக்க அரசியல்வாதிகளான பி.கே.ஆர். கட்சியின் ரஃபிஸி ரம்லி, நிக் நஸ்மி மற்றும் முன்னாள் அம்னோ உறுப்பினர் கைரி ஜமாலுடின் போன்றோருடன் கைக் கோர்ப்பது குறித்து ஹம்ஸா பரிசிலிக்க வேண்டும்.
அதே சமயம் மற்றொரு மலாய்க்காரக் கட்சியைத் தொடக்காமல் பி.கே.ஆர். கட்சியைப் போன்றதொகு பல்லினக் கட்சியை அவர் உருப்பெறச் செய்தால் சிறப்பாக இருக்கும்.
தற்போதைய காலக் கட்டம்தான் அதற்கு சரியானத் தருணமாகும். வெகுசன மக்கள் அதற்காகத்தான் காத்திருக்கின்றனர்.
ஏனெனில் அண்மையில் எழுந்த பன்றிப் பண்ணைகள் தொடர்பான சர்ச்சைகளினால் சீன சமூகத்தினரும் இந்துக் கோயில்கள் விவகாரத்தில் இந்தியர்கள், குறிப்பாக இந்துக்களும் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.
இதனால் கூட்டணி அரசாங்கத்திற்கு, குறிப்பாக அன்வாருக்கான மலாய்க்காரர் அல்லாதாரின் ஆதரவு கணிசமான அளவு குறைந்துள்ளதாக நம்பப்படுகிறது.
ஆனால் பாஸ் கட்சியின் மதவாதக் கொள்கைகளினால் பெரிக்காத்தான் கூட்டணிக்கு ஆதரவு வழங்குவதற்கும் மலாய்க்காரர் அல்லாதார் தயாராய் இல்லை.
எக்காரணத்தைக் கொண்டும் தனது சமய தீவிரவாதக் கொள்கைகளிலிருந்து பாஸ் கட்சி துளியளவும் விலகாது என்பதற்கு நமது கடந்த கால கசப்பான அனுபவங்கள் பறைசாற்றுகின்றன.
இத்தகைய சூழலில்தான் தங்களுடைய நலன் பேணக்கூடிய 3ஆவது அணியொன்றின் உருவாக்கத்திற்கு வெகுசன மக்கள் எதிர்பார்த்து நிற்கின்றனர்.
இந்நாட்டில் இனவாதமும், மதவாதமும் அரசமைப்பில் ஆழப்படுத்தப்பட்ட நிலையில், பிரிவினைகளுக்கு அப்பாற்பட்ட அரசியlலுக்காக ஏங்கும் மலேசியர்களுக்கு காலம்தான் பதில் சொல்லும்.
























