நாட்டின் 50% எண்ணெய் விநியோகம் ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது – பிரதமர்

ஈரான் போர்ச் சூழலால் எண்ணெய் விலையேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், மலேசியா ஓர் எண்ணெய் உற்பத்தி நாடாக இருந்தும் ஏன் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பிரதமர் அன்வார் இப்ராஹிம் விளக்கியுள்ளார்.

நிதி அமைச்சருமான அவர் கூறுகையில், மலேசியா இன்னும் நிகர எண்ணெய் இறக்குமதி நாடாகவே இருப்பதாகவும், நாட்டின் எண்ணெய் விநியோகத்தில் சுமார் 50% ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருவதாகவும் தெரிவித்தார்.

“மலேசியர்களைப் பாதுகாப்பதற்காக, அரசாங்கத்தின் மானியம் (மாதத்திற்கு) 700 மில்லியன் ரிங்கிட்டிலிருந்து 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது,” என்று அவர் கூறினார்.

இந்த மானியங்கள் BUDI95 மற்றும் BUDI டீசல் திட்டங்கள் மூலம் வழங்கப்படுவதால், பொதுமக்கள் மற்றும் பெரும்பான்மையான வணிகர்கள் சந்தை விலையை செலுத்த வேண்டிய அவசியமில்லை.

உலகளாவிய நிச்சயமற்ற சூழலுக்கு மத்தியிலும், மக்களின் நலன் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதே மடானி அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாகும்,” என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு வாரங்களில் அரசாங்கம் RON97 பெட்ரோல் விலையை 1.30 ரிங்கிட் உயர்த்தியுள்ளது, அதே சமயம் தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை 1.60 ரிங்கிட் அதிகரித்துள்ளது.

மானியம் இல்லாத RON95 பெட்ரோல் விலையும் 60 காசுகள் உயர்ந்துள்ளது.

எரிபொருள் விலையை மானிய விலையிலேயே தக்கவைக்க, அரசாங்கத்திற்கு மாதந்தோறும் 3.2 பில்லியன் ரிங்கிட் மானியச் செலவு ஏற்படும் என புத்ராஜெயா மதிப்பிட்டுள்ளது. இதில் RON95 பெட்ரோலுக்கு 2 பில்லியன் ரிங்கிட் மற்றும் கிழக்கு மலேசியாவில் தொடர்ந்து மானிய விலையில் விற்கப்படும் டீசலுக்கு 1.2 ரிங்கிட் பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு சுமார் 100 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

 

 

-fmt