முதிர்ந்த மரங்களின் நிலையை காலந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்று பெந்தோங் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

நேற்று ஜாலான் கராக் லாமாவில் விழுந்த மரம் ஒரு வாகனத்தின் மீது சாய்ந்து நசுக்கியதில் நான்கு பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து இது நடைபெற்றது.

பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் யங் சய்ஃபுரா ஒத்மான், கராக் லாமா (Jalan Karak Lama) சாலையோரத்தில் உள்ள முதிர்ந்த மரங்கள் குறித்து தொழில்நுட்ப மதிப்பீடுகளை மேற்கொள்ள, பொதுப்பணித் துறை அமைச்சகம், பொதுப்பணித் துறை (JKR) மற்றும் சாலை பராமரிப்பு ஒப்பந்த நிறுவனங்கள் நிபுணர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஜண்டா பாயிக் நுழைவாயிலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போது, மரம் ஒன்று வாகனத்தின் மீது விழுந்ததில் மாரான் அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் எடி ரட்சி, அவரது மனைவி, மகன் மற்றும் மைத்துனர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

வெளியிட்ட அறிக்கையில், அந்தப் பகுதியின் மலைப்பாங்கான நில அமைப்பும் முதிர்ந்த மரங்களும் தொடர்ந்து சவாலாக இருப்பதாகவும், சரிவு நிலைத்தன்மை மற்றும் மரங்கள் விழும் அபாயம் தொடர்பான பிரச்சினைகள் மாவட்டக் கூட்டங்களில் பலமுறை எழுப்பப்பட்டுள்ளதாகவும் யங் சய்ஃபுரா குறிப்பிட்டார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் மரங்கள் விழுந்த சம்பவங்கள், சுற்றுச்சூழல் அபாயங்களை முறையான மற்றும் திட்டமிட்ட முறையில் நிர்வகிக்க வேண்டிய அவசியத்தை நினைவூட்டுவதாக அவர் கூறினார்.

“மரங்களின் ஆரோக்கியம், வேர்களின் நிலைத்தன்மை மற்றும் மண்ணின் அமைப்பு ஆகியவற்றை காலகட்ட அடிப்படையில் தொழில்நுட்ப ரீதியாக மதிப்பீடு செய்வது, விரிவான கிளை வெட்டுதல் மற்றும் மரப் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிகாட்டியாக இருக்கும்”.

“குறிப்பாக கடுமையான வானிலை மற்றும் பருவமழைக் காலத்திற்கு முன்பாக, முதிர்ந்த மரங்கள் மற்றும் சரிவுப் பகுதிகளை கண்காணிக்கும் வகையில் சாலைச் சொத்து மேலாண்மை நடைமுறைகளும் மேம்படுத்தப்பட வேண்டும்,” என்று அவர் தெரிவித்தார்.

இந்த நடவடிக்கைகள் எவ்வாறு அமல்படுத்தப்படுகின்றன என்பதை தனது அலுவலகம் எதிர்காலக் கூட்டங்களில் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் யங் சய்ஃபுரா தெரிவித்தார்.

மேலும், ஆபத்தான நிலையில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் மரங்கள் குறித்து, பொதுமக்களும் உள்ளூர் சமூகங்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.