சரவாக், பாவ் பகுதியில் உள்ள ஒரு இடைநிலைப்பள்ளி கழிவறையில் இன்று காலை பெண் ஆசிரியர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
55 வயதுடைய அந்தப் பெண், ஆசிரியர் கழிவறைத் தரையில் அசைவற்றுக் கிடந்ததாகவும், காலை 9.08 மணிக்கு அவர் இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகவும் பாவ் மாவட்ட காவல்துறை தலைவர் ஹைடே ஏ ரஹ்மான் தெரிவித்தார்.
அந்தப் பெண் கடந்த 25 ஆண்டுகளாக அந்தப் பள்ளியில் அறிவியல் மற்றும் உயிரியல் பாடங்களைக் கற்பித்து வந்ததாக ஹைடே கூறினார். அவர் காலை 8.15 மணியளவில் கழிவறைக்குச் செல்வதற்கு முன்பு, கடைசியாக ஆசிரியர்கள் அறையில் காணப்பட்டார் என்று வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
காலை சுமார் 8.35 மணியளவில், அந்த ஆசிரியர் இன்னும் வகுப்பிற்கு வரவில்லை என்பதை சக ஆசிரியர் ஒருவர் கவனித்தார். இதனைத் தொடர்ந்து பள்ளி ஊழியர்கள் அவரை கழிவறையில் தேடினர்.
அவர்கள் கழிவறை கதவைத் திறந்தபோது, பாதிக்கப்பட்ட ஆசிரியர் தரையில் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டனர்.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதில் எவ்வித சந்தேகத்திற்குரிய பின்னணியும் இல்லை என்றும் பாவ் மாவட்ட காவல்துறை தலைவர் ஹைடே ஏ ரஹ்மான் தெரிவித்தார்.
ஆசிரியரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பாவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
-fmt
























