பி.கே.ஆர் (PKR) கட்சியின் இரண்டாம் நிலை பதவியிலிருந்து விலகும் தனது முடிவு குறித்து கருத்து தெரிவித்த நூருல் இஸா அன்வார் (Nurul Izzah Anwar), தான் பதவி விலகும் துணைத் தலைவர் எனக் குறிப்பிட்டு, தன்னால் “எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது,” என்று கூறினார்.
15-வது பொதுத் தேர்தலில் தனது குடும்பத்தின் வலுவான கோட்டையாகக் கருதப்பட்ட பெர்மாத்தாங் பாவு (Permatang Pauh) தொகுதியில் தான் அடைந்த தோல்வியை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், அதே வேளையில் கடந்த ஆண்டு பி.கே.ஆர் உட்கட்சித் தேர்தலில் அப்போதைய பதவியில் இருந்த ரஃபிஸி ரம்லியை (Rafizi Ramli) வீழ்த்தி தான் பெற்ற வெற்றியை மற்ற சிலர் விரும்பவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்னும் சிலருக்கு, நான் 2026-இல் இந்த (துணைத் தலைவர்) பதவியிலிருந்து விலகுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாததாக உள்ளது.
“நீங்கள் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது, ஆனால் உங்களுக்கு நீங்கள் உண்மையாக மட்டுமே இருக்க முடியும்,” என்று இன்று காலை மலாக்கா சர்வதேச வர்த்தக மையத்தில் (Melaka International Trade Centre) நடைபெற்ற பி.கே.ஆர் கட்சியின் ஆண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து ஆற்றிய உரையில் அவர் கூறினார்.
அவரது உரைக்குப் பிறகு, ஊடகவியலாளர்கள் அவரிடம் பேட்டி காண முயன்றனர். ஆனால், பதவி விலகும் முடிவு உட்பட எந்தவொரு கேள்விகளுக்கும் பதிலளிக்க மறுத்து அவர் சென்றுவிட்டார்.
ஆகஸ்ட் 6 அன்று வெளியிடப்பட்ட முகநூல் பதிவு ஒன்றில், கட்சியின் இரண்டாம் நிலை பதவியிலிருந்து விலகுவதற்கான தனது எண்ணத்தை இஸா உறுதிப்படுத்தினார்.
பி.கே.ஆர் கட்சியின் தகவல் தொடர்பு இயக்குநர் பஹ்மி பட்ஸில் (Fahmi Fadzil) கூறுகையில், கட்சியின் மத்திய தலைமைக்கு அவரது ராஜினாமா கோரிக்கை அன்றைய தினமே கிடைத்ததாகவும், ஆனால் இந்த வார இறுதியில் ஆண்டு மாநாடு முடிவடைந்த பிறகு அவருக்கு தற்காலிக விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பின்னர், பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசன் அப்துல் கரீம் (Hassan Abdul Karim) மிங்குவான் மலேசியா (Mingguan Malaysia) நாளிதழிடம் கூறுகையில், ஊழலை எதிர்த்துப் போராடுவதில் அரசாங்கம் கையாழும் அணுகுமுறை மீது ஏற்பட்ட அதிதிருப்தியே இஸாவின் பதவி விலகல் முடிவுக்குக் காரணம் எனக் கூறப்படுவதாகத் தெரிவித்தார்.
துணைத் தலைவர் பதவிக்கு இஸா போட்டியிட்டது பி.கே.ஆர் கட்சிக்குள்ளேயே உள் முரண்பாடுகளை ஏற்படுத்தியதாக விமர்சகர்கள் கருதினர்; ஏனெனில் இது, பொருளாதார அமைச்சராக இருந்த ரஃபிஸியின் ராஜினாமாவுக்கு வழிவகுத்தது.
பின்னர் ரஃபிஸி கட்சியிலிருந்து விலகி, பி.கே.ஆர் கட்சியின் மற்றொரு முன்னாள் தலைவரான நிக் நஸ்மி நிக் அகமதுவுடன் (Nik Nazmi Nik Ahmad) இணைந்து ‘பெர்சாமா’ (Bersama) இயக்கத்தை வழிநடத்தச் சென்றார்.
கட்சிக்குள் தொடரும் பதற்றங்கள்
17 ஆண்டுகள் பி.கே.ஆர் கட்சியில் பணியாற்றிய வோங் சென் (Wong Chen), கட்சியிலிருந்து விலகி, சுபாங் நாடாளுமன்றத் தொகுதியைக் காலியாக்கிவிட்டு ‘பெர்சாமா’ இயக்கத்தில் இணைந்ததன் மூலம் இந்த உட்கட்சி மோதல்கள் தொடர்ந்து நீடிக்கின்றன.
(முன்னாள் பி.கே.ஆர் நாடாளுமன்ற உறுப்பினர் வோங் சென் [ இடமிருந்து ஐந்தாமவர் ] பெர்சாமா இயக்கத்தில் இணைகிறார்)
தொகுதி வளர்ச்சி நிதிகளை நிர்வகிப்பதற்குப் பயன்படுத்தப்படும் மைஃகாஸ் (MyKhas) இணையப் பக்கத்திற்கான தனது நாடாளுமன்ற அலுவலக அணுகல் மே 20 அன்று முடக்கப்பட்டதை அவர் கண்டறிந்ததாகக் கூறப்படுகிறது.
மே 22 அன்று அவர் இதற்கு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்தார். மூன்று நாட்களுக்குப் பிறகு, அரசுக்குச் சொந்தமான நிதியளிப்பு நிறுவனமான ‘மலேசியா டெப்ட் வென்ச்சர்ஸ்’ (Malaysia Debt Ventures) தலைவர் பதவியிலிருந்து மே 31 முதல் அவர் நீக்கப்படுவதாக நிதி அமைச்சகம் கடிதம் அனுப்பியது.
ஒரு வாரத்திற்குப் பிறகு, பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியான் சுங் (Lee Chean Chung) தமக்கும் மைஃகாஸ் இணையப் பக்கத்திற்கான அணுகல் பறிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார்; அவரைத் தொடர்ந்து ஆகஸ்ட் 6 அன்று அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயிலும் (Rodziah Ismail) அவ்வாறு கூறினார்.
லீ மற்றும் வோங் ஆகிய இருவரும், தங்களுக்கு ரஃபிஸியுடன் இருந்த அரசியல் ரீதியான ஆதரவே இந்த நடவடிக்கைக்குக் காரணம் எனக் குறிப்பிட்ட வேளையில், ரோட்சியாவும் முன்னாள் பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளராகவே பார்க்கப்படுகிறார்.
























