மலேசியாவின் வர்த்தகம் ஜூலை மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 364.74 பில்லியன் ரிங்கிட் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது 2025ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 37.3% கூடுதலான வளர்ச்சியாகும்.
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு (Miti) வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டின் ஏற்றுமதி 38% அதிகரித்து 193.6 பில்லியன் ரிங்கிட்டாகவும், இறக்குமதி 36.4% உயர்ந்து 171.14 பில்லியன் ரிங்கிட்டாகவும் பதிவாகியுள்ளது. இதன் மூலம் மலேசியா 22.46 பில்லியன் ரிங்கிட் வர்த்தக உபரியைப் பெற்றுள்ளது.
மேலும், கடந்த 2020ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கி, மலேசியா தொடர்ந்து வர்த்தக உபரியைத் தக்கவைத்து வரும் 75ஆவது தொடர்ச்சியான மாதம் இந்த ஜூலை ஆகும் என்றும் அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், உற்பத்தி, விவசாயம் மற்றும் சுரங்கத் தொழில் ஆகிய மூன்று முக்கிய துறைகளிலும் ஏற்பட்ட பரவலான வளர்ச்சியே இந்த ஏற்றுமதி உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று தெரிவித்துள்ளது.
மின்சாரம் மற்றும் மின்னணு (E&E) பொருட்கள் தொடர்ந்து மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றன. செமிகண்டக்டர்கள் மற்றும் இதர உயர்மதிப்புமிக்க E&E பொருட்களுக்கான வலுவான தேவை காரணமாக, 2025 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இவற்றின் ஏற்றுமதி 32 பில்லியன் ரிங்கிட் அதிகரித்து, முன்னெப்போதும் இல்லாத மாதாந்திர ஏற்றுமதி மதிப்பை எட்டியுள்ளது.
மேலும், இந்த மாதத்தில் உலோகத் தாதுக்கள், உலோகக் கழிவுகள், அத்துடன் பாமாயில் மற்றும் பாமாயில் சார்ந்த விவசாயப் பொருட்களின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. இது ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மலேசியாவின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில், சீனாவுடனான வர்த்தகம் 18.2% பங்களிப்பை வழங்கி முதலிடத்தில் உள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா (12.7%) மற்றும் தைவான் (8.2%) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. பொருளாதாரக் கூட்டமைப்புகளைப் பொறுத்தவரை, ஆசியான் (Asean) நாடுகளுடனான வர்த்தகம் 26.8% ஆகவும், ஐரோப்பிய ஒன்றியம் (EU) உடனான வர்த்தகம் 7% ஆகவும் பதிவாகியுள்ளது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, கடந்த மாதத்தில் மலேசியாவின் மொத்த வர்த்தகத்தில் இந்த நாடுகளின் பங்களிப்பு மட்டும் 72.8% ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2026-இல் 2 டிரில்லியன் ரிங்கிட் எல்லையைத் தாண்டியது மலேசிய வர்த்தகம்
முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சு, இந்த ஆண்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒட்டுமொத்த வர்த்தகம் 2 டிரில்லியன் ரிங்கிட் எல்லையைக் கடந்துள்ளதாக அறிவித்துள்ளது. இது 2025ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே எட்டப்பட்ட ஒரு மைல்கல் சாதனை ஆகும்.
கடந்த ஜூலை மாத நிலவரப்படி, நாட்டின் ஒட்டுமொத்த வர்த்தகம் 2.16 டிரில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதாகவும், அதே வேளையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஏற்றுமதி 1 டிரில்லியன் ரிங்கிட் என்ற எல்லையைத் தாண்டி சாதனை படைத்துள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டின் வர்த்தக உபரி 170.5 பில்லியன் ரிங்கிட்டாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்குக்கும் மேலாகும். ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்த வர்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வர்த்தக உபரி ஆகிய அனைத்தும் வரலாற்றிலேயே மிக உயர்ந்த கூட்டு மதிப்பை பதிவு செய்துள்ளன.
இந்த ஒட்டுமொத்த செயல்பாட்டின் தொடர்ச்சியான வலுவான நிலை, ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் மலேசியாவின் வர்த்தக வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொடர் முன்னேற்றத்தை அப்பட்டமாக எடுத்துக் காட்டுகிறது, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-fmt
























