பினாங்கு, ஏர் இதாம் பகுதியில் உள்ள சீனப் பள்ளிக்கு வெளியே, கடந்த ஆகஸ்ட் 30 அன்று தவறுதலாக கும்பலைச் சேர்ந்தவர்கள் என நினைத்து இரண்டு ஆண்கள் வெட்டப்பட்ட சம்பவத்தில் பதின்மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில்லாத கடன் பிரச்சினை மற்றும் தவறான அடையாளம் காரணமாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பினாங்கு காவல்துறைத் தலைவர் டென்னிஸ் லிம் தெரிவித்தார்.
பினாங்கு காவல்துறை தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு கும்பல் கடனாளியிடமிருந்து கடனை வசூலிக்க முயன்றதாகவும், அப்போது அங்கு வந்த இருவரையும் அந்த கடனுடன் தொடர்புடைய கும்பலைச் சேர்ந்தவர்கள் என தவறாக நினைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இருவரும் ஒரு மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அணிந்திருந்ததைப் போன்ற நீல நிற ஆடையை அணிந்திருந்ததாகவும் லிம் கூறினார்.
சந்தேக நபர்கள் அவர்கள் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று நினைத்து, இருவரையும் தாக்கி வெட்டியுள்ளனர், என்று கூறிய அவர், பாதிக்கப்பட்டவர்கள் பலத்த காயம் அடைந்த போதிலும், தற்போது அவர்களின் நிலைமை சீராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.
காவல்துறையினர் பின்னர் மாநிலம் முழுவதும் ஐந்து இடங்களில் நடத்திய அதிரடி சோதனைகளில் 16 முதல் 33 வயதுக்குட்பட்ட 13 சந்தேக நபர்களைக் கைது செய்தனர். அவர்களில் மூவர் பதின்ம வயதினர் என்றும், சந்தேக நபர்களில் சிலர் ‘கெங் 04’ கும்பலைச் சேர்ந்தவர்கள் என்றும் நம்பப்படுகிறது.
ஆபத்தான ஆயுதத்தால் கடுமையான காயம் ஏற்படுத்துதல் மற்றும் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபடுதல் ஆகிய குற்றங்களுக்காக, இந்த வழக்கு தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 326 மற்றும் 148 ஆகியவற்றின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-fmt
























