தனிநாடு அல்ல சுயாட்சியையே கோருகிறோம்! இரா. சம்பந்தன்

sampanthan_meeting_001தமது கட்சி கேட்பது தனிநாடு அல்ல, சுயாட்சி அதிகாரமே என தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமது தேர்தல் கொள்கை அறிக்கை முழுமையாக படித்து அறியுமாறு சகலரிடமும் கேட்டுக்கொள்வதாக கூறினார்.

கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை அறிக்கை தொடர்பில் அரசு சுமத்தும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அன்று விடுதலைப் புலிகள் கேட்டதையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று கேட்பதாக ஜனாதிபதி அண்மையில் கூறியிருந்தார்.

ஆனால் விடுதலைப் புலிகள் அன்று என்ன கேட்டனர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று என்ன கேட்கிறது என்பதை ஜனாதிபதி கூறவில்லை.

எப்படியாவது கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை அறிக்கையில் இருக்கும் விடயங்களை முன்வைத்து சிங்கள மக்களை தூண்டிவிடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும் விஞ்ஞாபனத்தின் உண்மை என்ன என்பதை அறிந்த தமிழ் மக்கள் அந்த நிலைமைக்கு செல்ல மாட்டார்கள்.

நாங்கள் சகல தேர்தல்களிலும் முன்வைக்கும் தேர்தல் கொள்கை அறிக்கைகளில் ஐக்கியமான நாட்டிற்குள் வடக்கு கிழக்கிற்கு சுயாட்சி நிர்வாகத்தையே கேட்கிறோமே அன்றி தனிநாடு அல்ல. எந்த சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பு தனிநாடு கேட்காது.

தமிழ் மக்கள் கௌரவமாக வாழும் சூழலை விரும்புகின்றனர். இதனால் கூட்டமைப்பின் தேர்தல் கொள்கை அறிக்கை முழுமையாக வாசிக்க வேண்டும். அதனை முற்றாக வாசிக்காது மக்களுக்கு தவறான தகவல்களை வழங்கக் கூடாது.

அரசாங்கம் இதுவரை தமிழ் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை முன்வைக்கவில்லை. குறைந்தது தேர்தலுக்கு பின்னர் வடபகுதி மக்களுக்கு வழங்கப் போகும் நிவாரணங்கள் என்ன என்பதைக் கூட தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடவில்லை.

இப்படி எதனையுமே செய்யாது எவ்வாறு வந்து எந்த அடிப்படையில் மக்களிடம் வாக்குகளை கேட்கின்றனர்?.

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு ஏற்று கொள்ளக்கூடிய அரசியல் தீர்வை முன்வைக்கத் தயார் என்றால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அது தொடர்பில் சாதகமான பதிலை வழங்கும்.

வடக்கு மக்களுக்கு அரசாங்கம் வழங்கியது எதுமில்லை. தமிழ் மக்களை ஏமாற்றாது அவர்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வை வழங்க வேண்டும் என்றார்.

TAGS: