”இவர்தான் பிரபாகரனின் மகள்” !- ”அது நான் இல்லை” என்கிறார் இசைப்பிரியா! உயிரைப் பிழியும் வீடியோ

p36aஈழ இன அழிப்புப் போருக்கு இன்னும் ஓர் ஆதாரமாக வெளிவந்திருக்கிறது இசைப்பிரியாவின் வீடியோ. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்களை வெளியிட்ட சனல் 4 தொலைக்காட்சி, இப்போது இசைப்பிரியா உயிருடன் நடமாடும் காட்சிகளை வெளியிட்டுள்ளது.

மனதை கனக்கச் செய்யும் அந்தக் காட்சியில்… சேறு நிரம்பிய ஒரு வயல்வெளியில் இசைப்பிரியா வீழ்ந்து கிடக்கிறார். அவரது உடல் நிர்வாணமாக்கப்பட்டுள்ளது. அருகில் இலங்கை இராணுவ வீரர்கள் நிற்கின்றனர்.

இன்னொரு இராணுவ வீரர் கையில் ஒரு வெள்ளைத் துணியுடன் வருகிறார். அந்தத் துணியை இசைப்பிரியாவின் உடலின் போர்த்தி, அவரை அழைத்துச் செல்கின்றனர்.

”இவர்தான் பிரபாகரனின் மகள்” என்று ஒரு இராணுவ வீரர் சொல்கிறார்.

”அது நான் இல்லை” என்கிறார் இசைப்பிரியா.

வெறும் மூன்று வார்த்தைகள்தான். அதை சொல்லும்போது இசைப்பிரியாவின் குரலை கவனியுங்கள்… சொல்ல முடியாத சோகம் மனதை கவ்விக்கொள்ளும்.

ஒரு மாபெரும் வீரப் போராட்டம் வீழ்ந்து போனதையும், எதிரிகளின் முன்னே நிர்வாணமாய் நிற்க நேர்ந்த அவமானத்தையும், கூட்டு வன்முறைக் குழுவிடம் சிக்கிக்கொண்ட ஒரு பெண்ணின் அச்சத்தையும், துடிக்கும் உயிரின் கடைசி நேர பரிதவிப்பையும்…. அந்தக் குரலில் உணரலாம்.

 அது இசைப்பிரியாவின் குரல் மட்டும் அல்ல. அந்தக் காட்சியின் பின்னணியில் குண்டுச் சத்தங்கள் இடைவிடாமல் ஒலிப்பதைக் கேட்கலாம்.

அவற்றில் பல்லாயிரம் இசைப்பிரியாக்களின் உயிர் ஓலங்கள் உறைந்திருக்கின்றன. இசைப்பிரியா, அவர்களின் பிரதிநிதி.

விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பிரிவில் செய்தி வாசிப்பாளராக, நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக பணிபுரிந்த இசைப்பிரியா கொல்லப்பட்டு வெள்ளைத் துணி போர்த்தி மூடிவைக்கப்பட்ட படத்தை ஏற்கெனவே சனல் 4 வெளியிட்டு இருந்தது. அந்த வெள்ளைத் துணிக்குப் பின்னே மறைந்திருந்த கதைதான் இப்போதையை வீடியோவில் உள்ளது.

இலங்கையில் நடைபெற உள்ள கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது என்ற கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் சூழலில், இசைப்பிரியாவின் வீடியோ புதிய அழுத்தங்களை உருவாக்கியுள்ளது.

இலங்கை அரசோ வழக்கம்போல, ”அது போலியான வீடியோ” என்று புறங்கையால் மறுத்துள்ளது. அது மட்டுமல்ல… இலங்கை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, ”இந்தப் பொய்யான வீடியோவை மட்டும் காரணமாகக் கொண்டு, கொமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்கக் கூடாது. இந்த விஷயத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்புகளை இந்திய அரசு பொருட்படுத்தத் தேவையில்லை, ஏனெனில் தமிழ்நாடு மட்டுமே இந்தியா அல்ல” என்று கூறியிருக்கிறார்.ெ

மனித உரிமை என்ற அம்சத்தில் இந்த வீடியோவை அணுகும் ஒருசில மேற்குலக நாடுகள், ஒருவேளை காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கலாம். இந்த வீடியோவுக்கு முன்பே காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிப்பதாக கனடா அரசு அறிவித்து, அதற்கு இலங்கையின் போர்க்குற்றத்தையே காரணமாகவும் கூறியுள்ளது. வேறு எந்த நாடும் இதுவரை அப்படி அறிவிக்கவில்லை.

இந்த சமயத்தில் கடந்த ஆண்டு சனல் 4 வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப் படத்தை நினைவில் கொண்டுவர வேண்டும்.

அப்போது வெளியிடப்பட்ட பாலச்சந்திரன் புகைப்படங்களால் தமிழகத்தில் மிகப் பெரும் மாணவர் போராட்டம் வெடித்தது. கட்டுக்கடங்காத அந்தப் போராட்டம் மாநிலம் தழுவியதாகவும், அரசியல் கட்சிகளின் சூழ்ச்சிகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருந்தது.

இறுதியில்… ஒருங்கிணைக்கப்பட்ட தலைமையும், மைய நோக்கமும், அமைப்பு பலமும் இல்லாமல் மாணவர்களின் எதிர்ப்பு அரசியல் சிதறிப்போனது என்றாலும், அந்தப் போராட்டம் தமிழ்நாட்டில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான மாணவர்களை அரசியல் படுத்தியது.

அதுபோன்ற பெருந்திரள் மாணவர் போராட்டத்துக்கான எழுச்சி இப்போது பெரிய அளவில் தென்படவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க… அத்தகைய எதிர்ப்புகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பதில் மாநில அரசு முனைப்போடு இருக்கிறது.

அதனால்தான் காமன்வெல்த் எதிர்ப்புப் போராட்டங்கள் அதிரடியாக முடக்கப்படுகின்றன. அதில் ஈடுபடுவோர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்கிறது.

இசைப்பிரியாவின் இந்த வீடியோப் பதிவு நம்மை நிலைகுலைய வைக்கிறது. இதுபோன்றுதானே ஒவ்வொரு விடுதலைப் புலி வீரனும் கோரமாக சித்ரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருப்பான்?

காணொளியைக் காண இங்கே அழுத்தவும்

http://www.youtube.com/watch?v=915_gGRZ5Lw&feature=player_embedded

இதுபோன்றுதானே தமிழ் மக்கள் உயிர் வதையோடு உடல் சிதறி செத்திருப்பார்கள்?

எந்த மண்ணில் காலூன்றி விடுதலைக் கனவுடன் போரிட்டார்களோ… அதே மண்ணில் எதிரிகளால் சிதைக்கப்பட்டு கொல்லப்படுவது அவலத்திலும் அவலம்.

நான் இசைப்பிரியா

ஓயாத கடலின் அலைகள்
இடைவிடாது என்னுடலில் மோதியபடி
மடிந்து சரிகின்ற வேளையில்
ஆழமாய் வேர்ப் பரப்பி
விரிந்திருக்கும் நீர்த்தாவரத்தைப் போல
என்னை இழுத்துச் செல்கிறாய்

என் காலடியிலிருந்து
ஒழுகி வழியும் நீர்த்துளிகள்
உன் அழித்தொழிப்புக்குச் சாட்சியாய்
வெளியெங்கும் உருண்டு கொண்டிருக்கும்.

அடர்ந்த வனத்தில் தனித்துத் திரியும்
மிருகத்தின் வெறிகொண்டு
என்னை வல்லுறவு செய்கின்றாய்

சதையை ஊடுருவிய உன்னால்
என் நிலத்தின் நிணநீர் ஓடும்
எலும்புகளை என்ன செய்ய இயலும்?

என் மார்பகங்களை அரிந்து வீசிய உனக்கு
அதன் அடியிலிருக்கும்
நெருப்பின் சூடு தகிக்கவில்லையா?

நீ ஏந்திய இரும்புக் கருவியும்
பாய்ச்சிய உடற்குறியும்
இனி எழுச்சியின் அமிலத்தில்
கரைந்தே போகும்

என் இரத்தத்தில் பூத்திருக்கும்
செங்காந்தள் மலர்களே
என் நிலமெல்லாம் செழித்திருக்கும்

வெகுகாலமில்லை வெகுதூரமுமில்லை.
– சுகிர்தராணி

TAGS: