தெங்கு அட்னான்: சொத்துவரி உயர்வு என் மனைவிக்குக்கூடத்தான் பிடிக்கவில்லை

adnanகோலாலும்பூரில் சொத்து வரி உயர்வு மறுஆய்வு செய்யப்படும் எனக் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அறிவித்துள்ளார்.

சொத்து வரி மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுவது கோலாலும்பூர் மக்களில் பலருக்குப் பிடிக்கவில்லை.  தம் மனைவிக்கும்கூட அது பிடிக்கவில்லை என தெங்கு அட்னான் கூறினார்.

இன்று, கோலாலும்பூர் கூட்டரசு பிரதேச எம்பிகளுடன் ஒரு மணி நேரத்துக்கு மேலாக இரகசிய கூட்டம் நடத்திய  அமைச்சர்  மக்களுக்கு சுமையாக இல்லாத அளவில் சொத்து வரி உயர்வு அமைந்திருக்கும் என்றார்.

ஆனால், வரி உயர்வு விகிதம் குறைக்கப்படுமா,  குறைத்தால் எவ்வளவு குறைக்கப்படும்  போன்ற விவரங்களை அவர் வெளியிடவில்லை.  புதிய முடிவு டிசம்பர் 11-இல் அறிவிக்கப்படும் என்றார்.

“மக்களுக்குச் சிறந்தது எதுவோ அதைத்தான் முடிவு செய்வேன்”, என்றாரவர்.