தனி நாடு உருவாக நாட்டில் யுத்தம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை!- லக்ஷ்மன் கிரியெல்ல

kiriella3உலக நாடுகளில் தனி நாடுகள் உருவாக யுத்தம் இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை எனவும் அந்த நாடுகளில் ஆட்சியில் இருக்கும் அரசாங்கங்களின் செயற்பாடுகளே இதற்கு போதுமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு திமோர் நாட்டை சேர்ந்த எவரும் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழவில்லை. ஆனால் இந்தோனேசியாவில் இருந்து கிழக்கு திமோர் என்ற நாடு பிரிந்து சென்றது.

வெளிநாடுகளுடன் மோதினால் இலங்கையும் அப்படியான அனர்த்தத்தில் விழுவதை தவிர்க்க முடியாது.

புலம்பெயர்ந்த நாடுகளில் மக்கள் கிழக்கு திமோருக்காக அன்று போராட்டம் நடத்தவில்லை. புலம்பெயர் மக்களை கொண்டிருக்காத கிழக்கு திமோர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் ஊடாக தனி நாடாக தன்னை உருவாக்கிக் கொண்டது.

இலங்கையும் இந்த வழியிலேயே தற்பொழுது பயணித்து வருகிறது என்பது மிகவும் தெளிவாகி தென்படுகிறது.

கிழக்கு திமோர் மக்களுக்கு வெளிநாடுகளில் புலம்பெயர் மக்கள் இருக்காத போதிலும் இலங்கை தமிழ் மக்களுக்கு உலகில் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் இருக்கின்றனர்.

அவர்கள் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகின்றனர். கிழக்கு திமோர் சம்பந்தமாக மூன்று யோசனைகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

இலங்கைக்கு எதிராகவும் மூன்றாவது யோசனை முன்வைக்கப்பட உள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான இந்த யோசனை மனித உரிமை ஆணைக்குழுவில் நிறைவேறினால் இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை ஒன்று நடைபெறுவதை தடுக்க முடியாது என்றார்.

TAGS: