இலங்கை கடற்படையினருக்கு பயிற்சி: இந்தியா அழைப்பு!

warshipஇலங்கைக் கடற்படையினர் இந்தியாவில் பயிற்சி பெற வருமாறு இந்திய கடற்படைத் தளபதி டி.கே. ஜோஷி அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையின் தெற்கு துறைமுகப் பகுதியான காலேயில் நடைபெறும் சர்வதேச கடற்படை மாநாட்டில் இந்தியாவின் சார்பில் பங்கேற்பதற்காக ஜோஷி இலங்கை சென்றுள்ளார்.

அப்போது, இலங்கை அதிபர் ராஜபட்சவை சந்தித்து டி.கே. ஜோஷி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தச் சந்திப்புக்கு பிறகு இலங்கை அதிபர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம்:

கடற்படை தொழில்நுட்பங்கள் தொடர்பான நான்கு ஆண்டு பட்டப்படிப்பு மற்றும் பயிற்சியை இலங்கை கடற்படையினருக்கு அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இந்தப் பயிற்சியைப் பெற உலக அளவில் பெரும் போட்டி நிலவுகிறது. இதில், இலங்கைக் கடற்படையினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்தப் பயிற்சி தற்போது இந்திய வீரர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தியக் கடல் பகுதியின் பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த பேச்சுவார்த்தையின்போது ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.