இந்தியாவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கோத்தபாயவை சந்தித்து பேச்சு

santhu_gotta_001இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நேச்சல் சந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கொழும்பில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

நேற்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் இலங்கை பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் யஷ்வந்த்குமார் சின்ஹாவும் பங்கேற்றுள்ளார்.

இருதரப்பு நலன்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளதாக, இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், இந்தியாவின் பிரதி தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, இவர், முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டத்தில் இந்திய, இலங்கை, மாலைதீவு கடலோரக் காவல்படை அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.

அதில் இந்தியாவின் பிரதிப் பாதுகாப்பு ஆலோசகர் நேச்சல் சந்து பங்கேற்கவில்லை.

அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச, புதுடெல்லிக்கு ஒரு இரகசியப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: