மாத்தளை புதைகுழி எலும்புகளை சீனாவுக்கு அனுப்பக் கூடாது!- காணாமல்போனோரின் உறவினர்கள் எதிர்ப்பு

matala_bones_002இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளை நகரில் மருத்துவமனைக் கட்டடமொன்றுக்கான அத்திவாரம் தோண்டும்போது ஓராண்டுக்கு முன்னர் கிடைத்த மனித எலும்புகளை மேலதிக பரிசோதனைக்காக சீனாவுக்கு அனுப்பும் அரசின் திட்டத்துக்கு காணாமல்போனவர்களின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்த மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய, காணாமல்போனோரின் உறவினர்கள் தமது எதிர்ப்பை எழுத்துமூலமாக நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர்கள் சார்பில் வாதிடும் சட்டத்தரணியான நாமல் ராஜபக்ச பிபிசியிடம் தெரிவித்தார்.

சீனா, இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய உறவைப் பேணுவதனால் அதன் பரிசோதனை முடிவுகளில் நம்பகத்தன்மை இல்லை என்று அவர் கூறினார்.

மாத்தளை புதைகுழி விவகாரத்தில் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் வெளியாகியிருந்தன.

சீனாவில் நடத்தப்படும் இரசாயன பரிசோதனை மூலம் நீதி கிடைக்காது என்று காணாமல்போனவர்களின் உறவினர்கள் கருதுவதாக சட்டத்தரணி நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

சீனா தவிர்ந்த ஜனநாயக மரபுகளைப் பேணுகின்ற வேறொரு நாட்டில் இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும் என்றும் அவர் கூறினார்.

மாத்தளை மனிதப் புதைகுழியில் இருந்து 154 மனித மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட்டன.

1988-89 காலப்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சி ஒடுக்கப்பட்டபோது காணாமல்போனவர்களின் உடல்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.

TAGS: