போருக்குப் பின்னர் தமிழர்களை வெல்வதில் அரசாங்கம் தோல்வி

anurakkumara_dissayanake_001போருக்கு பின்னர் தமிழர்களை வெற்றி கொள்வதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதுடன், அதற்குப் பதிலாக தமிழர்களை அரசாங்கம் மேலும் தனிமைப்படுத்தியது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் தேசிய பிரச்சினை தற்பொழுது முக்கிய கட்டத்தில் உள்ளது. தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவில்லை.

காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சரியான பதில்கள் வழங்கப்படவில்லை. தமிழர்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாப்படவில்லை.

அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் நம்பிக்கை முற்றாக குறைந்து வருகிறது. போர் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் அதிகமான அக்கறையை செலுத்தியிருந்தால், அண்மையில் வடக்கு மாகாண சபை நிறைவேற்றிய தீர்மானம் ஒரு தீவிரமான பிரச்சினையாக இருந்திருக்காது.

அமெரிக்காவின் இலங்கை மீதான தலையீடு கட்டாயம் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதுடன் அதற்கான வழியை திறந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தையும் தோற்கடிக்க வேண்டும் என்றார்.

TAGS: