தீர்மானத்தை 24 நாடுகள் எதிர்த்தன என்று அரசாங்கம் கூறுவது, செந்தில் -கவுண்டமணியின் வாழைப்பழக் கணக்கு போன்றது!

ariyanenthiranஜெனிவாவில் கொண்டுவரப்பட்ட  தீர்மானத்தில் அரசாங்கம் வெற்றியடைந்து விட்டதாக காட்டுவதற்கு செந்திலும் கவுண்டமணியும் சினிமாவில் வாழைப்பழம் வாங்கிய கணக்கினைப் போன்று அதனைக் காட்டி சிங்கள மக்களை ஏமாற்றுகின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தினை ஆதரித்து 23 நாடுகளும், அதனை எதிர்த்து 12 நாடுகளும், ஏனைய 12 நாடுகளும், நடுநிலமை வகித்து வாக்களித்திருந்தன. இதுதான் அங்கு நடைபெற்ற வாக்கெடுப்பாகும்.

இதனை சினிமாவில் வரும் வாழைப்பழக் கணக்கினைப் போன்று இந்த அரசாங்கம் காட்ட முயல்வதுதான் ஆச்சரியமாக இருக்கின்றது.

அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களிப்பு இடம்பெற்றிருக்கின்றது என அரசதரப்பு ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பாக கருத்துக்கூறும் போதே இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கூறுகையில்,

ஜெனிவாத் தீர்மானத்திலே அரசாங்கம் வெற்றியடைந்து விட்டதாக சிங்கள மக்களிடத்தே காட்டுவதற்கு செந்திலும் கவுண்டமணியும் சினிமாவில் வாழைப்பழம் வாங்கிய கணக்கினைப் போன்று நடைமுறையில் அதனைக் காட்டி சிங்கள மக்களை ஏமாற்ற நினைக்கின்றார்கள்.

இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த 12 நாடுகளுடன் நடுநிலைமை வகித்த 12 நாடுகளையும் கூட்டி மொத்தம் 24 நாடுகள் அரசாங்கத்திற்கு ஆதரவான நாடுகள் என காட்டி தப்பிக்க நினைப்பது விந்தையான செயலாக பார்க்க வேண்டி இருக்கின்றது.

அப்படியானல் தமிழர்;களைப் பொறுத்தவரையில் இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் 23 உடன் நடுநிலைமை வகித்த 12 நாடுகளையும் சேர்த்தால் எத்தனை நாடுகள் வரும் என்பதனை உரியவர்கள் கணக்கிட்டுப் பார்த்தல் புரியும் தமிழர் தரப்பில் எத்தனை நாடுகள் ஆதரவளித்திருக்கின்றது என்பது.

நடுநிலைமை வகித்த நாடுகளை கணக்கில் எடுப்பதன் மூலம் சிங்கள மக்களை அறிவில்லாதவர்கள் என காட்ட நினைக்கின்றார்கள். இதனை அந்த இனத்தில் உள்ள புத்திஜீவிகள் உரியவர்களுக்கு எடுத்துக்கூறி உண்மையான கணக்கினை புரிய வைக்க வேண்டியது அவர்களினது கடமையாகும்.

ஊடகங்களை எடுத்து நோக்கும் போதும் அரசாங்கத்திற்கு ஆதரவான ஊடகங்கள் தவறான கணக்கெடுப்பையே காட்டுகின்றார்கள். இச்செயற்பாடானது ஊடக தர்மத்தை மீறும் செயற்பாடாகவே பார்க்க வேண்டியுள்ளது எனவும் கூறினார்.

TAGS: