இலங்கைக்காக மலேசிய பொலிஸ் தமிழர்களை வேட்டையாடுகிறது!- சூவாரம் அமைப்பு

malaysian-policeஇலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் மலேசிய பொலிஸார் இலங்கை அகதிகளை வேட்டையாடுவதாக மலேசியாவின் உள்ளுர் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது

மலேசிய பொலிஸார்,  நாட்டின் அதிகாரம் மிக்க அரசியல்வாதிகளின் உத்தரவுகளுக்கு ஏற்ப செயற்படுவதாக சூவாரம் என்ற அமைப்பின் பேச்சாளர் ஆர் தேவராஜன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மலேசிய அதிகாரிகளால் கடந்த வியாழக்கிழமையன்று மூன்று இலங்கைத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கிருபநாதன், மகாதேவன் கிருபாகரன் மற்றும் குஸாந்தன் சந்திரலிங்கம் ஆகியோரே கைதுசெய்யப்பட்டவர்களாவர்.

அரசியல் அடைக்கலம் கோரிய இவர்கள் மூவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் அவர் பாரிய சித்திரவதைக்கு உள்ளாக நேரிடும் என்று தேவராஜன் அச்சம் வெளியிட்டுள்ளார்.

எனவே குறித்த இலங்கையர்களி;ன விசாரணை குடிவரவு சட்டத்தின் அடிப்படையில் நடைபெறவேண்டும் என்று தேவராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இவர்கள் மூவரையும் நாடு கடத்தக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிலும் கோரியுள்ளதாக தேவராஜன் தெரிவித்துள்ளார். -Tamilwin

TAGS: