தமிழீழத்தை உருவாக்க பொருத்தமான இடம் தமிழ்நாடு

tamilnadu_ltte_001இலங்கையில் தமிழீழத்தை உருவாக்க பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஜெயலலிதா விடுத்துள்ள கோரிக்கையை வன்மையாக கண்டிப்பதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அண்மையில் சந்தித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இலங்கையில் தமிழீழத்தை உருவாக்க பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் அதனை செய்ய இந்தியா தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஜெயலலிதா ஜெயராம் 25 யோசனைகள் அடங்கிய மகஜர் ஒன்றை பிரதமரிடம் கையளித்தார்.

இந்த யோசனைகளில் சில யோசனைகள் நேரடியாக இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை கொண்டு இலங்கையில் தமிழீழத்தை உருவாக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலையுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக ஐ.நாவின் யோசனை ஒன்றை கொண்டு வருதல், கச்சதீவை திரும்பபெற வேண்டும்.

இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை பாதுகாக்க வேண்டும் போன்ற யோசனைகள் அதில் அடங்குவதுடன் அவை நேரடியாக இலங்கையை பாதிக்கக் கூடியவை.

நாங்கள் இந்த சகல யோசனைகளையும் வன்மையாக கண்டிக்கின்றோம்.

நல்லிணக்கம், சகவாழ்வு போன்றவை குறித்து தொடர்ந்தும் எம்மை வலியுறுத்தி வரும் ஜெயலலிதா போன்ற இந்திய அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகளினால் என்ன நடக்கும்?.

இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இடையிலான நல்லிணக்கம் மட்டுமல்லாது சகவாழ்வுக்கு இருக்கும் வாய்ப்பும் இதன் மூலம் இல்லாமல் போகும்.

நல்லிணக்கத்திற்கு தடையேற்படும் வகையில் நடந்து கொள்வது ஜெயலலிதாவா? நாங்களா?.

ஜெயலலிதா, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களை இணைத்து கொண்டு ஈழத்தை உருவாக்க வேண்டும் என்றால் அதற்கு பொருந்தமான இடம் தமிழ் நாடு.

தமிழ் நாட்டில் பெரும்பான்மையான மக்கள் தமிழர்கள். இலங்கையில் தமிழீழத்தை உருவாக்க தலையிடுமாறு ஜெயலலிதா இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுக்காது தமிழ் நாட்டில் ஈழத்தை அமைக்க அனுமதி கோரியிருக்க வேண்டும்.

இலங்கையில் இருப்பது இதற்கு முற்றும் முழுதான வேறு நிலைமை. இலங்கையில் வாழும் தமிழர்கள் நாடு முழுவதும் பரந்து வாழ்கின்றனர்.

வடக்கில் 45 வீதமான தமிழ் மக்களே வசித்து வருகின்றனர். ஏனைய தமிழர்கள் நாட்டின் பல பிரதேசங்களில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

இதனால் ஜெயலலிதாவின் பாரதூரமான கோரிக்கையின் நோக்கம் என்ன என்பது தெளிவாகியுள்ளது.

இவ்வாறான கோரிக்கைகள் மூலம் 83 கறுப்பு ஜூலை போன்ற கவலைக்குரிய நிலைமையை மீண்டும் இலங்கையில் உருவாக்குவதே அவர்களின் நோக்கம் எனவும் முஸ்ஸாமில் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: