மத்தியகிழக்கில் போர்நிறுத்த முயற்சி தோல்வி; சண்டைகள் மீண்டும் ஆரம்பம்

காசாவில் நிர்மூலமான கட்டிடம் ஒன்றுஒருவார இஸ்ரேலிய தாக்குதலில் காசாவில் பல கட்டிடங்கள் நிர்மூலம் ஆகியுள்ளன

காசாவில் பாலஸ்தீன ஆயுததாரிகளின் நிலைகள் இருபதுக்கும் மேலானவற்றை தாம் வான் தாக்குதல் நடத்தி அழித்திருப்பதாக இஸ்ரேலிய ஆயுதப்படைகள் கூறுகின்றன.

ஹமாஸும் இஸ்ரேல் மீது தொடர்ந்து ரொக்கெட் குண்டுகளை வீசி வருகிறது.

போர்நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவருவதற்கு எகிப்து முன்மொழிந்த யோசனை பலனளிக்காமல் போன நிலையில் இந்த புதிய மோதல்கள் நடந்துள்ளன.

காசாவிலுள்ள பாலஸ்தீன ஆயுதக்குழுவான ஹமாஸுடன் கடந்த ஒருவாரமாக இஸ்ரேல் ஈடுபட்டுவருகின்ற சண்டையை நிறுத்துவதற்கு எகிப்து முன்மொழிந்த யோசனைக்கு பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான இஸ்ரேலிய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்திருந்தது.

ஆனால் ஹமாஸ் அமைப்பின் ஆயுதப் பிரிவு இந்த யோசனையை, சரணடைவதற்குச் சமம் என்று வர்ணித்து நிராகரித்திருந்தது.

இஸ்ரேல் பிடித்துவைத்துள்ள ஹமாஸ் உறுப்பினர்களை அது விடுவித்து, காசா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அகற்ற எகிப்துடன் இஸ்ரேல் சேர்ந்து செயலாற்றாத வரையில், இஸ்ரேலுடனான தமது மோதல் வலுக்கவே செய்யும் என்று ஹமாஸ் கூறியிருந்தது.

தாம் தாக்குதலை நிறுத்தியிருந்த நிலையிலும் காசாவில் இருந்து ரொக்கெட்டுகள் வந்து விழுந்ததாக கூறிய இஸ்ரெல், பின்னர் மறுபடியும் காசா மீது குண்டுவீச்சை ஆரம்பித்தது.

கடந்த ஒருவார காலத்தில் இஸ்ரேலிய தாக்குதலில் பொதுமக்கள் பெரும்பான்மையாக பாலஸ்தீனர்கள் கிட்டத்தட்ட இருநூறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். -BBC