பொருளாதாரத் தடைகளுக்கு பதிலடி கொடுத்த ரஷ்யா

russia_putinபொருளாதார மேம்பாட்டிற்காக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் முடிவை உக்ரைன் எடுத்தபோது, ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புத்தின் அதனை நிராகரித்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்ட பிரிவினை மோதல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

உக்ரைனின் கிழக்குப் பகுதி பிராந்தியத்தில் ஒன்றான கிரிமியா உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கு இடையே ரஷ்யாவுடன் தன்னை இணைத்துக்கொண்டது.

உக்ரைனின் இன்னும் சில பகுதிகளையும் ரஷ்யாவுடன் இணைக்க ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனை ரஷ்யா ஆதரிப்பதாகக் கூறி அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அந்நாட்டின் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.

உக்ரைனில் நிலவும் நெருக்கடிக்கு காரணகர்த்தா ரஷ்யா என்பதை வெகுவாக விமர்சித்த கம்யூனிஸ்ட் நாடுகளில் போலந்தும் ஒன்றாகும். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக போலந்திலிருந்து இறக்குமதியாகும் காய்கறி, பழங்களுக்கு ரஷ்யா முற்றிலுமாகத் தடை விதித்துள்ளது. இந்த இறக்குமதியில் ஏராளமான பூச்சிக்கொல்லி மிச்சங்களும், நைட்ரேட் ரசாயனங்களும் கலந்துள்ளது என்று ரஷ்யாவின் உணவு சுகாதார அதிகாரிகள் தடை விதித்தபோது குறிப்பிட்டுள்ளனர்.

போலந்தில் விளையும் அப்பிள்களுக்கு ரஷ்யாவே பிரதான ஏற்றுமதி சந்தையாகும். ஆண்டுதோறும் ஒரு பில்லியன் யூரோ வரையிலான அந்நிய செலாவணியை போலந்திற்கு இந்த வர்த்தகம் பெற்றுத் தந்தது. இந்தத் தடை உத்தரவினால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.6 சதவிகிதம் பாதிக்கப்படக்கூடும் என்று போலந்தின் துணைப் பிரதமர் ஜனுஸ் பிசோசின்ஸ்கி தெரிவித்துள்ளார்.

போலந்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயப் பொருட்களே 3.8 சதவிகிதத்தை அளிப்பதால் விவசாயிகள் தங்களின் வருமானத்திற்கான நஷ்ட ஈட்டை ஐரோப்பிய ஒன்றியத்திடம் கேட்டுப் பெறத் திட்டமிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி ரஷ்யாவின் மீதான தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் விதமாக சமூக ஊடகங்களில் அப்பிள் படங்களை அவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.