மீரியபெத்த மண்சரிவில் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்பட்டவர்களின் காணாமற் போனவர்களின் எண்ணிக்கையை இருட்டடிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகங்களை மக்களும், சமூக ஆர்வலர்களும் எழுப்புகின்றனர்.
கடந்த புதனன்று மண்சரிவு இடரில் 500, 400, 300 என குறிப்பிடப்பட்ட – உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்பட்டவர்களது காணாமற்போனவர்களது எண்ணிக்கையானது நேற்று மாலையில் 38 ஆக குறைத்துக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஐவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 33 பேர் மாத்திரமே காணாமற் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கண்டெடுக்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 5 எனவும் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 34 என பொலிஸாரும், 100 இற்கும் அதிகமானோர் காணாமல்போயுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமும் நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தது.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=DGNh8X3dmz8
ஆனால் நேற்றைய தினம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொலிஸாரது எண்ணிக்கைக்கு சமனாகும் வகையில் தனது எண்ணிக்கையை குறைத்துக் கொண்டு தகவல் வெளியிட்டிருந்தது.
இலங்கையில் பணியாற்றும் சிரேஸ்ட இந்தியப் பத்திரிகையாளரொருவரது தகவல்களின் படி ஆகக் குறைந்து 200 பேர் வரையில் புதையுண்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படும் நிலையில், மக்களது விபரங்களை அறிந்து கொள்வதற்காக சம்பந்தப்பட்ட தோட்ட நிர்வாகத்தினரையும், கிராம சேவையாளரையும் தொடர்புகொண்ட போது அவர்களது கைத்தொலைபேசிகள் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
தனது பெயரை இனங்காட்டிக் கொள்ள விரும்பாத சமூக ஆர்வலரொருவர் கருத்து வெளியிடும் போது உண் மைகளை மூடிமறைப்பதற்கு யாரோ முனைவது வெள்ளிடைமலையாகும் எனத் தெரிவித்தார். பெற்றோர்களை மண்சரிவில இழந்த பாடசாலை செல்லும் பிள்ளைகளின் எண்ணிக்கையே 75 என ஊடகங்கள் உறுதிப்படுத்தும் போது காணமல்போனவர்களின் எண் ணிக்கை எவ்வாறு 34 ஆக இருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=bWC9EA_i1T8
இதுதொடர்பில் கருத்துவெளியிட்ட மற்றுமொரு சமூக ஆர்வலர் மண்சரிவு இடம்பெற்ற தினத்தன்று ஆங்கிலப்பத்திரிகைக்கு தகவல் வெளியிட்டிருந்த பதுளை மாவட்ட செயலாளர் ரோஹண கீர்த்தி திஸா நாயக்க 317 பேர் அவ்விடத்தில் வாழ்ந்ததாக குறிப்பிட்டிருந்தமையை சுட்டிக்காட்டினார்.
காணாமல்போனோர் தொடர்பான விவரம் அரசால் இதுவரையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
மேலும், பூனாகலை மற்றும் கொஸ்லந்தை பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்கள் குறித்தும் இதுவரையில் முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை. பூனாகலை பாடசாலையில், சுமார் 136 பேரும், கொஸ்லந்தை பாடசாலையில் சுமார் 50 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல் வெளியிடப்படுகிறது.
இதேவேளை, மீரியபெத்தையை அண்மித்த பகுதிகளுக்கும் மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளதால், அந்தப் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள் மேற்படி இரண்டு பாடசாலைகளிலும் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கடந்த மூன்று தினங்களாக தங்கவைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

































