போரில் விடுதலைப் புலிகளை அழிக்க இந்தியா திட்டம் தீட்டியது: நோர்வே பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்

vijay_sankarஇலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பில் பல நாடுகள் பங்கு பற்றியிருந்தாலும் இந்தியாவே தொடர்ந்தும் பங்களிப்பையும் குழப்பமான நிலைப்பாடுகளுடன் அதனை அணுகிய நாடு என நோர்வே பேர்கன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் விஜய்சங்கர் அசோகன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணைக்குழு நியமித்துள்ள விசாரணைக் குழுவிற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையில் நடந்த தமிழின அழிப்பில் இங்கிலாந்து, அமெரிக்கா, சீனா உட்பட பல்வேறு நாடுகள் பங்கு கொண்டிருந்தன. ஆனால், மிக தொடர்ச்சியான பங்களிப்பையும் குழப்பகரமான நிலைப்பாடுகளுடன் அதனை அணுகிய நாடு இந்தியா.

கு.ராமக்கிருஷ்ணன் இந்தியாவின் இராணுவ உதவி செய்ததை சாட்சியமாக எழுதிய கடிதத்தையும் உள்ளடக்கி சமாதான பேச்சுவார்த்தையின் பொழுது தரகராக செயல்பட்ட எரிக் சொல்ஹெய்மின் மேடைப் பேச்சுக்கள் மற்றும் பல்வேறு ஆவணங்களையும் இணைத்து ஆய்வு செய்து இந்தியாவின் தமிழின அழிப்பின் பங்களிப்பு தொடர்பாகவும் அசோகன் உறுதி செய்துள்ளார்.

அசோகன் ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவிற்கு அனுப்பிய அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நோர்வேயில் 2008 ஆம் ஆண்டு முதல் வசித்து வருகிறேன். இலங்கையின் போரில் நான் பிறந்தநாடான இந்தியா எல்லா வகையிலுமான பங்களிப்பை செய்து வருகிறது என தெரிந்த நிலையில், இலங்கைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தைக்கான அனுசரணையாளராக நோர்வே செயல்பட்டதையும் நன்கு அறிந்துள்ளேன்.

2008-2009 ஆம் ஆண்டு நடந்த நோர்வே இளையோர்களின் போராட்டம் என்னை மிகவும் ஈர்த்தது.

அப்போதிருந்து நான் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் இந்தியாவின் நேரடி மறைமுக பங்களிப்பு தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன்.

போரின் இறுதி காலக்கட்டமான 2008-2009 ஆண்டுகளில் இந்தியா உட்பட்ட ஏகாதிபத்திய நாடுகள்தமிழின அழிப்பை வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தன.

அந்த தருணத்தில் , Dr. Francis Boyle (Professor, International law, llinois University,USA), ஐக்கிய நாடுகளின் பாதுக்காப்பு சபையில் நடைமுறையில் இருந்த சட்ட வடிவத்தை மேற்கோள் காட்டி, இலங்கையில் நடக்கும் போரை நிறுத்த உடனடியாக பாதுகாப்பு சபை கூட்டத்தை கூட்டுமாறு அழைப்பு விடுத்தார்.

இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா நாடுகளின் கபட மெளனத்தை அவர் தனது அறிக்கையில் கடுமையாக சாடியிருந்தார்.

அத்துடன் ஐநா அவை அட்டவணை பிரிவு 35-ன் கீழ் இந்தியாவிற்கு இருக்கும் கடமையை சுட்டிக்காட்டி, உடனடி போர் நிறுத்தத்திற்கான கூட்டத்தை கூட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

வன்னியில் இலங்கை அரசு நடத்தும் இனப்படுகொலையை முற்றாக நிறுத்த வேண்டும் என்று இந்தியா அந்த கூட்டத்தில் வலியுறுத்த வேண்டும் என அவர் இந்தியாவிற்கு வேண்டுகோள் விதித்திருந்தார்.

இலங்கையின் வடக்கில் நடைபெற்றுக் கொண்டிருந்த இனப்படுகொலைக்கு இந்தியா எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. உலக நாடுகளின் அழுத்தத்தையும் கண்டு கொள்ளாமல் இந்தியா நடித்து வந்தது.

ஏன் என்ற கேள்விக்கான விடையாக போரின் இறுதியில் ராஜபக்ஷ இந்திய ஊடகம் ஒன்றிக்கு வழங்கிய பேட்டி அமைந்தது.

மஹிந்த ராஜபக்ஷ மே 29.2009, இல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு வழங்கிய போட்டியில்,

நான் இந்தியவின் போரையே நடத்தினேன்” என்று கூறினார். இந்தியா நேரடியாக இலங்கையுடன் சேர்ந்து போரில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்கத் திட்டம் தீட்டியது என்பது இதன் மூலம் வெட்டவெளிச்சமானது என விஜய் அசோகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விஜய் சங்கர் 2008 ஆம் ஆண்டு முதல் நோர்வேயில் இயற்பியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: