பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: நவ. 28-இல் பிரான்ஸ் முடிவு

palestine1பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது குறித்து பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றத்தில் இம்மாதம் 28-ஆம் தேதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் புதன்கிழமை தெரிவித்தன.

நடைமுறையில் எந்தவித மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும், தார்மீக ரீதியில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தத் தீர்மானத்துக்கான கோரிக்கையை, பிரான்ஸ் நாட்டின் சோஷலிஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தின் முன்வைக்கவிருப்பதாகத் தெரிகிறது.

முன்னதாக, இதுகுறித்து அந்த நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரன்ட் ஃபேபியஸ் கூறியதாவது:

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து வழங்கும் தருணம் வந்துள்ளது.

எனினும், எப்போது, எப்படி அந்த முடிவை எடுப்பது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது.

பாலஸ்தீனப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையைப் போக்கும் விதமாக, அந்த அங்கீகாரம் இருக்க வேண்டும் என்று லாரண்ட் ஃபேபியஸ் தெரிவித்திருந்தார்.

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கி பிரிட்டன் நாடாளுமன்றம் கடந்த மாதம் 13-ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றியது.

அதனைத் தொடர்ந்து சுவீடன் நாடாளுமன்றமும் பாலஸ்தீனத்தை தனி நாடாக 30-ஆம் தேதி அங்கீகரித்தது.