நாங்கள் குண்டர்கள் அல்லர்: பழனிவேலுக்கு மஇகா உறுப்பினர்கள் அறிவுறுத்து

mohanமஇகா இளைஞர்  பகுதி  முன்னாள்  தலைவர்  டி.மோகன்,  டிசம்பர்  18-இல்  கட்சித் தலைமையகத்துக்கு  வெளியில்  கூடி  நின்றவர்களைக் குண்டர்கள்  என்று  கட்சித்  தலைவர்  ஜி.பழனிவேல்  கூறியிருப்பதை  மறுக்கிறார்.

பழனிவேலின்  கூற்று பொறுப்பற்றது  என்றுரைத்த  மோகன்,  அங்கு  கூடியவர்கள்  அனைவருமே  கட்சி  உறுப்பினர்கள்  என்றார்.

அவர்கள்  மஇகா கிளைகளையும்  இளைஞர்,  மகளிர்  அணிகளையும்  சேர்ந்தவர்கள்  என  மோகன்  ஓர்  அறிக்கையில்  குறிப்பிட்டார்.

“வெளியார்  யாருமில்லை. எங்கள்  எதிர்ப்பைக்  காண்பித்துக்கொள்ளத்  தலைமையகம்  வருவோம்  என்று  ஏற்கனவே  கடிதம்  அனுப்பி வைத்திருந்தோம். போலீசுக்கும்  தெரியப்படுத்தி  இருந்தோம்.

“பழனிவேலை  ஆதரிக்கும்  தலைவர்களும்  அவர்களின்  ஆதரவாளர்களுக்குத்  தலைமையகத்தில்  கூடுமாறு  குறுஞ்செய்தி   அனுப்பினர்”, என்றாரவர்.

பழனிவேல்-ஆதரவு  தலைவர்கள்  அவர்களின்  ஆதரவாளர்களை  அங்கு  வரச்  சொன்னது  தங்களை  எதிர்ப்பதற்காகவும்  பிரச்னைகள்  கொடுப்பதற்காகவும்தான்  என்றும்  மோகன்  கூறினார்.

தலைவரைச்  சந்திக்க  வேண்டும்  என்ற கோரிக்கையை  ஏற்று   அவர்  மட்டும்  தங்களைச்  சந்தித்திருந்தால்  அங்கே  நாங்கள் கூட்டம்  நடத்த  வேண்டிய  அவசியமே  இருந்திருக்காது  என்றாரவர்.

“உண்மையான  உறுப்பினர்களைக்  குண்டர்கள்  என்று  வருணித்த  பழனிவேலைக்  கடுமையாகக்  கண்டிக்கிறோம்”, என்றும்  மோகன்  கூறினார்.