பாலியல் தொழிலில் சிறுமிகள்…மனித வெடிகுண்டுகளாக சிறுவர்கள்: ஐ.எஸ் வெறியாட்டம்

syria_child_001ஈராக்கில் சிறுவர்களை கடத்தி பாலியல் தொழிலாளியாகவும், மனித வெடிகுண்டுகளாகவும் ஐ.எஸ்.ஐ.எஸ் மாற்றுவதாக ஐ.நா சபை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான “Rights of the Child” நடத்திய ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.

அந்த அறிக்கையில், 18 வயதுக்கு கீழ் உள்ள பெரும்பாலான ஈராக் சிறுவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, அவர்களை ‘மனித வெடிகுண்டுகளாக’ மாற்றி தாக்குதல்களை நடத்த முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

கடத்தப்படும் சிறுவர்கள் தீவிரவாதிகளுக்கு துணை போகாவிட்டால், அவர்களின் தலைகளை வெட்டியும், உயிருடன் புதைத்தும் கொன்று விடுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சிறுமிகளை கடத்தி அவர்களை பாலியல் தொழிலுக்கு உட்படுத்துவதாகவும் ஆய்வை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுவர்களை கடத்தி சித்ரவதை செய்து கொலை செய்வது மிகவும் வேதனை அளிக்கும் வகையில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி Renate Winter தெரிவித்திருக்கிறார்.

கடத்தப்படும் சிறுவர்களின் கழுத்தில் விலைப்பட்டியலை மாட்டி அடிமைகளாக விற்கபடுவதாகவும், அவர்களில் சிலர் மனநலம் குன்றியவராக இருந்தால் அவர்களை மனித வெடிகுண்டுகளாக மாற்றி விடுவதாக Renate Winter மேலும் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் ஒரு பிரிவினரை ‘ஜிகாதிகள் சிறுவர்களாக’ மாற்ற பயிற்சி அளிப்பது போன்ற வீடியோக்களும் ஆய்வில் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தாக்குதலின்போது ஏற்படும் விபத்துகளில் சிக்கி பெறும்பாலான சிறுவர்கள் இறந்தும், உறுப்புகளை இழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு முடிவுகளை தொடர்ந்து, குழந்தைகளின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஈராக் அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை உத்தரவிட்டுள்ளது.

-http://world.lankasri.com