அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் தாக்குதல் நடத்தப் போவதாக தீவிரவாதிகள் எச்சரிக்கை

sormali_terror_001அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடகளிலுள்ள வணிக வளாகங்களில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

நைரோபியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல் போன்று அமெரிக்கா, இங்கிலாந்து, கனடாவில் உள்ள வணிக வளாகங்களில் நடத்துவதற்கு அதே அல் சஹாப் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி, மிரட்டல் விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தீவிரவாதிகள் வீடியோ காட்சியை ஒன்றை கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ 6 நிமிட படக்காட்சிகளை கொண்டுள்ளது.

அதில் நைரோபி வெஸ்ட் கேட் வணிக வளாக தாக்குதலை கொண்டாடும் கிராபிக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ள அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து வணிக வளாகங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் மின்னசோட்டா மாகாணத்தில் உள்ள புளுமிங்டன் வணிக வளாகம், கனடாவில் உள்ள வெஸ்ட் எட்மண்டன் வணிக வளாகம், இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஆக்ஸ்போர்டு தெரு வணிக வளாகம் ஆகியவற்றைத்தான் இந்த தீவிரவாதிகள் தாக்குதல் இலக்காக நிர்ணயித்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான கென்யாவின் தலைநகரான நைரோபியில் உள்ள வெஸ்ட் கேட் வணிக வளாகத்தில் கடந்த 2013-ம் ஆண்டு, செப்டம்பர் 21ம் திகதி அல்கொய்தா ஆதரவு அல் சஹாப் தீவிரவாதிகள் (சோமாலியா நாட்டினர்) துப்பாக்கிகளுடன் புகுந்தனர். அவர்கள் தொடர்ந்து 4 நாட்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இந்த தாக்குதலில் மொத்தம் 67 பேர் உயிரிழந்தனர். 175 பேர் காயம் அடைந்தார்கள். இது உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

-http://world.lankasri.com