சர்வதேச விசாரணையைத் தடுக்கவே தேசிய அரசு அமைக்கப்பட்டுள்ளது

ranil_maithriரணிலின் நரி மூளையும் மைத்திரியின் யானை மூளையும் சேர்ந்து இலங்கையில் தேசிய அரசை நிறுவியுள்ளது. தேசிய அரசு அமைக்கப்பட்டதும் அதனை முதலில் வரவேற்றவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்­ என்பதை இங்கு நோக்குதல் அவசியம்.

தேசிய அரசை அமைத்ததன் மூலம் மகிந்த ராஜபக்­வின் நெருங்கிய ஆதரவாளர்களாக இருந்த முன்னாள் அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவி கிடைத்துள்ளது.

அதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருக்கிறார்.

ஆக, மைத்திரி ஜனாதிபதி; ரணில் பிரதமர்; ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்ந்தவர்கள் அமைச்சர்கள் என்ற வகையில் எதிர்க் கட்சி இல்லை என்பதாகப் பாராளுமன்ற நிலைமை மாற்றப்பட்டுள்ளது.

இத்தகையதொரு அமைப்பை ஏற்படுத்திய பெருமை மைத்திரியையும், ரணிலையுமே சாரும். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வுக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கமாட்டோம் என்று ஜனாதிபதி மைத்திரியும் பிரதமர் ரணிலும் கூட்டாகச் சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால் அப்படி எதுவும் சொல்லாமல், மகிந்தவின் ஆதரவாளர்களுக்கு- தேர்தலில் மைத்திரியை தோற்கடிக்க கடும் பிரயத்தனம் செய்தவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அதாவது தமிழ் மக்கள் வாக்களிக்காவிட்டால் மைத்திரி ஜனாதிபதியுமில்லை, ரணில் பிரதமரும் இல்லை என்ற சூழ்நிலையே இருந்திருக்கும். எனினும் தமிழ் மக்கள் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து அவரை ஜனாதிபதியாக்கிவிட, தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்­வுக்குப் பக்கபலமாக இருந்த முன்னாள் அமைச்சர்களுக்கு மந்திரிப் பதவியைக் கொடுத்து தேசிய அரசை அமைத்துள்ளார்.

இவ்வாறு தேசிய அரசை அமைப்பதன் ஊடாக இலங்கை மீதான சர்வதேச விசாரணையைத் தடுப்பதே நோக்கமாகும்.

சர்வதேச விசாரணை இடம்பெற்றால், அது இலங்கைக்கு அவமானம் என்று கூறியவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க. ஆக, சர்வதேச விசாரணையைத் தடுத்து நிறுத்த சிங்கள இனம் ஒன்றுசேர்ந்து-ஓரணியில் திரண்டு தீட்டிய மிகப்பெரும் திட்டமே தேசிய அரசாகும்.

சர்வதேச விசாரணை இடம்பெற்றால் அது மகிந்தவுக்கும் அவரது சகாக்களுக்கும் ஆபத்து என்பதுடன் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாணு மாறும் சர்வதேசம் அழுத்தம் கொடுக்கும்.

அந்நிலையில் அந்த அழுத்தத்தை நிறைவேற்ற வேண்டி வரும் என்பதால், சர்வதேச விசாரணையைத் தடுப்பதே ஒரேவழி என சிங்கள அரசியல் தலைமைகள் நினைத்து ஓரணியில் திரண்டுள்ளன.

அட, தேசிய அரசை அமைப்பதில் மகிந்த ராஜபக்­ வுக்கும் காத்திரமான பங்கு இல்லாமலா போகும்?

இனி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைமை கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகின்றது.

எங்களை எதிர்க்க அவர்கள் ஒன்று சேர்ந்தால் நாங்கள் தானே அவர்கள் எதிர்க்கும் கட்சி. இம்… என்ன நடக்கப் போகுது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

-http://www.tamilwin.com

TAGS: