தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ரெபிகியோ கடல் வழியாக சென்ற எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவை அடுத்து அப்பகுதியில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பிளைன் ஆல் அமெரிக்கன் பைப்லைன் நிறுவனம் குழாய் மூலம் அமெரிக்காவின் முக்கிய நகரங்களுக்கு எண்ணெய் சப்ளை செய்து வருகிறது.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ரெபுகியோ கடற்கரை பகுதியான லாஸ் பிளோர்ஸில் இருந்து கவியோடா செல்லும் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான குழாயில் கடந்த செவ்வாயன்று கசிவு ஏற்பட்டது.
இதனால் ரெபுகியோ மாநில கடற்கரை முழுவதும் கச்சா எண்ணெயில் மிதந்தது. சுமார் 94 ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் கடலில் கலந்திருப்பதால் 9 மைல் தூரத்திற்கு கடல், கச்சா எண்ணெயாக காட்சியளிக்கிறது.
இந்த விபத்தால் அதிகம் பாதிக்கபட்ட சாண்டா பார்பரா கடற்கரை பகுதியில் ஆளுநர் அவசரகால நிலையை அறிவித்துள்ளார்.
இதன் மூலம் மிக விரைவாக அக்கடல் பகுதியில் கலந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்ற முடியும் என ஆளுநர் எட்மண்ட் பிரவுன் தெரிவித்துள்ளார்.
-http://world.lankasri.com