போகோஹராம் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்: தற்கொலைப்படைகளாக மாறும் பெண்கள், குழந்தைகள்

boko_haramநைஜீரியாவில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மூலமாக நடத்தப்படும் தற்கொலைப்படை தாக்குதல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஐ.நா. சபை அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது.

நைஜீரியாவின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி வரும் போகோஹராம் தீவிரவாதிகள், தங்கள் தீவிரவாத பணிகளுக்காக பெண்கள், குழந்தைகளை அடிக்கடி கடத்திச்செல்லும் நிகழ்வுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில் போர்னோ மாநிலத்தின் சிபோக் பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கூட 200 பெண் குழந்தைகளை கடத்திச்சென்றது உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குழந்தைகளை மீட்க முடியாமல் நைஜீரிய ராணுவமும், பாதுகாப்பு படையினரும் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் போகோ ஹரம் தீவிரவாதிகள் குழந்தைகள் மற்றும் பெண்களை தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயன்படுத்தி வருவதாகவும், இப்படிப்பட்ட தாக்குதல்கள் தற்போது அதிகரித்து வருவதாகவும் ஐ.நா. அதிர்ச்சி தகவல் வெளியிட்டு உள்ளது.

யுனிசெப் எனப்படும் ஐ.நா.வின் சர்வதேச குழந்தைகள் நிதியத்தின் சிறப்பு உறுப்பினர் லாரென்ட் கூறுகையில், நைஜீரியாவில் கடந்த ஆண்டு 26 தற்கொலைப்படை தாக்குதல்கள் நடந்துள்ளன.

ஆனால் இந்த ஆண்டு இன்னும் 6 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் 27 தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் பெரும்பாலான தாக்குதல்களில் ஈடுபட்டது குழந்தைகளும், பெண்களுமே என்று தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் மற்றும் பெண்களை வேண்டுமென்றே அச்சுறுத்தி இந்த தாக்குதல்களில் ஈடுபடுத்தி வருவதாக யுனிசெப்பின் நைஜீரியாவுக்கான தூதர் ஜீன் காவ் கூறியுள்ளார்.

-http://world.lankasri.com