ஏமனில் இருந்து ஹூத்தி கிளர்ச்சிக்காரர்களால் தமது நாட்டுக்குள் ஏவப்பட்ட ஸ்கட் ஏவுகணை ஒன்றை தாம் சுட்டு வீழ்த்தியதாக சவுதி அரேபியா கூறியுள்ளது.
இரவு வேளையில் தமது நாட்டை நோக்கி வந்த அந்த ”ஸ்கட்” ஏவுகணையை ”பாட்ரியாட்” ஏவுகணை கண்டுபிடித்து தடுத்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஹமீஸ் முஸாயிட் நகரை நோக்கிய திசையில் அது ஏவப்பட்டிருந்ததாக அவர்கள் கூறினர்.
கிளர்ச்சிக்காரர்களின் இந்த ஏவுகணை வீச்சு, அவர்கள் தரப்பில் இருந்து மோதல் நடவடிக்கைகள் மீண்டும் அதிகரிப்பதை காண்பிக்கிறது.
ஹூத்திகளுக்கு எதிரான சவுதி தலைமையிலான வான் தாக்குதலும் அண்மையில் அதிகரிக்கப்பட்டது.
சுவிஸில் ஒரு சமாதானப் பேச்சுவார்த்தையை அடுத்த வாரம் ஆரம்பிக்கலாம் என்று ஐநா எதிர்பார்த்திருந்த நிலையில் இது நடந்துள்ளது.
அந்த பேச்சுவார்த்தையில் தாம் கலந்துகொள்வோம் என்று இரு தரப்பும் கூறியுள்ளன.
-BBC