ஆப்கானிஸ்தானில் பள்ளி சென்றதற்காக 3 மாணவிகள் முகத்தில் ஆசிட் வீச்சு: 2 பேர் கவலைக்கிடம்

Taliban-Fighters1காபூல்: ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கு படிக்க சென்ற காரணத்திற்காக 3 சிறுமிகள் மீது 2 பேர் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இருக்கும் பெரிய பள்ளி ஒன்றில் 16 முதல் 18 வயது வரையிலான 3 சிறுமிகள் படித்து வருகிறார்கள். கடந்த சனிக்கிழமை அன்று அவர்கள் 3 பேரும் சேர்ந்து பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் மாணவிகளின் முகத்தில் ஆசிட் வீசி தாக்குதல் நடத்தினர்.

இந்த சம்பவத்தில் படுகாயம் அடைந்த மாணவிகள் அருகில் உள்ள நூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன் பிறகு தகவல் அறிந்து மருத்துவமனைக்கு வந்த மாணவிகளின் பெற்றோர் அவர்களை அங்கிருந்து அழைத்துச் சென்று வேறு ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

3 மாணவிகளில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. பள்ளிக்கு சென்றதற்கு இது தான் தண்டனை என்று கூறி அந்த 2 பேர் தங்கள் மீது ஆசிட் வீசியதாக மாணவிகள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளனர்.

tamil.oneindia.com