கணவரின் போராட்டம் முடிவுக்கு வர வேண்டும்: அதுவே சித்தி ஹஸ்மாவின் பிரார்த்தனை

sitiமுன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர் முகம்மட்  இன்று 90வது  பிறந்த  நாளைக்  கொண்டாடுகிறார். பிறந்த  நாள்  கொண்டாட்டத்தில்  யார்  உடன்  இருப்பார்களோ  இல்லையோ 59ஆண்டுகளாக  அவரது  வாழ்வின்  ஒளியாக  இருந்துவரும்  சித்தி  ஹஸ்மா  அலி மட்டும்  கண்டிப்பாகக் கூட  இருப்பார்.

பிறந்த நாளுக்காக கணவருக்குச்  சிறப்புப்  பரிசு  கொடுத்து  ஆச்சரியப்பட  வைக்கும்  எண்ணமெல்லாம்  அவருக்குக் கிடையாது.

“அவருக்கு  எதுவும்  வாங்கிக்  கொடுக்க  நினைக்கவில்லை. வேண்டியதெல்லாமே  அவரிடம்  இருக்கின்றன.

“அவரிடம்  கடிகாரங்கள், பேனாக்கள்  எல்லாமே  இருக்கின்றன. அதுதான்  வேறு  எதுவும்  தேவையில்லை  என்றேன்”, என  சித்தி  ஹஸ்மா  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

அப்படியானால்  பிறந்த  நாள்  பரிசாக  என்னதான் கொடுப்பார்?

ஒரு  சிறிய  விருந்து அத்துடன்  கணவரின்  போராட்டம்  முடிவடைய   வேண்டும்  என்ற பிரார்த்தனை- இதுதான் மகாதிருக்கு  சித்தி  ஹஸ்மாவின்  பிறந்த  நாள்  பரிசு.

மகாதிர்  உடலாலும்  மனத்தாலும்  நலமே  வாழ  பிரார்த்தனை  செய்யப்போவதாக  அவர்  கூறினார்.

“அத்துடன்  அவரது  போராட்டம் முடிவுக்கு  வர  வேண்டும்  என்றும்  பிரார்த்திப்பேன். அது  எப்படி முடியப் போகிறது  என்பது எனக்குத்  தெரியாது”, என்றாரவர்.

இன்று  மகாதிர்  90வது  பிறந்தாளைக்  கொண்டாடுகிறார். இன்னும்  இரண்டு  நாளில்  சித்தி  ஹஸ்மா  அவரது 89வது பிறந்த  நாளைக்  கொண்டாடுவார்.