குடிக்கும் கணவர்களுக்கு மனைவியர் அளிக்கும் கடும் “தண்டனை”

கென்யா தலைநகர் நைரோபியிலிருந்து இரண்டு மணி நேர தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்தில் கள்ளச் சாரயம் பலரது வாழ்வை நாசமாக்கியிருக்கிறது. குடிக்கு அடிமையான தங்கள் கணவர்களின் ஆணுறுப்பை மனைவியர் துண்டித்துவிடும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன.

cueca
 

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள், இரவில் இந்த இரும்புக் கவசத்தை அணிந்துகொள்ளலாம் என்கிறார் இந்த கடைக்காரர்.

 இந்தப் பகுதியில் எளிதில் கிடைத்துவரும் கள்ளச்சாராயத்தின் காரணமாக, ஆண்கள் குடிக்கு அடிமையாவதால், பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் பெண்களே குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இங்கே கிடைக்கும் கள்ளச்சாராயத்தின் விலை மிகவும் குறைவு என்பதோடு, அதிக போதையையும் அளிப்பதால் ஆண்கள் எளிதில் இந்த சாராயத்திற்கு அடிமையாகின்றனர். பலர் வேலை பார்க்கும் திறனை இழந்துவிட்டனர். இது இப்பகுதியில் மிகத் தீவிரமான ஒரு பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

இந்தச் சாராயத்தை ஒழிப்பதற்காகப் போராடிவரும் அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான கனினி கெகா, இந்தப் பழக்கத்தின் காரணமாக தன் சகாக்கள் பலர் பலியாகிவிட்டதாகக் கூறுகிறார். இந்த குடி பிரச்சனையின் காரணமாக, அப்பகுதி ஆண்கள் வேறொரு அபாயத்தையும் சந்தித்துவருகிறார்கள்.

அதாவது, குடிப்பழக்கத்தின் காரணமாக திருமண உறவில் ஈடுபாடு காட்டாத கணவர்களின் ஆணுறுப்பை மனைவியர் துண்டித்துவிடும் சம்பவங்கள் ஆங்காங்கே நடக்க ஆரம்பித்திருக்கின்றன.

“திருமணமாகிவிட்டால் சில விஷயங்களை எதிர்பார்க்கிறோம். என் கணவர் என்னுடன் உறவுகொள்ளாவிட்டால், “அது” எதற்கு அவருக்கு? “அதை” வெட்டிவிடலாமே? உங்களிடம் இருக்கும் பொருளை நீங்கள் பயன்படுத்தவில்லையென்றால், அதற்குப் பயனேதும் இல்லை. வெட்டிவிட வேண்டியதுதானே…” என்று பிபிசியிடம் தெரிவித்தார் ஒரு பெண்.

குடியின் காரணமாக ஆண்கள் தங்கள் பிறப்புறுப்பை இழக்காமல் இருக்க, இரும்பாலான ஒரு கவசத்தைக் கண்டுபிடித்து ஒருவர் விற்பனையையும் துவக்கிவிட்டார்.

“ஒருவர் மதுவின் காரணமாக, ஆண்மையிழந்துவிட்டால், அதற்காக அவர் தன் ஆணுறுப்பை இழக்க வேண்டியதில்லை. இதைத் தடுக்க, இடுப்புக்குக் கீழே ஒரு இரும்பாலான ஆடை அணிந்துகொள்வதுதான் நல்லது. தூங்கும்போது அவர்கள் இதை அணிந்துகொள்ளலாம்” என்கிறார் இதன் விற்பனையாளர்.

ஆனால், இதெல்லாம் தற்காலிகத் தீர்வுகள்தான். முழுமையாக கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டுவருகிறது. விரைவிலேயே இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம் என நம்புகிறார்கள் இந்தப் பகுதி மக்கள். -BBC

TAGS: