மெக்காவில் கிரேன் விழுந்து 107 பேர் இறந்தது கடவுளின் செயல்: கட்டுமானப்பணி தலைமை பொறியாளர் பேச்சு

mecca_acc_001சவுதி அரேபியாவின் மெக்காவில் கிரேன் விழுந்து 107 பேர் உயிரிழந்தது கடவுளின் செயலே தவிற வேறெந்த தவறும் நிகழவில்லை என அந்த கட்டுமானப்பணியை மேற்கொண்டு வரும் தலைமை பொறியாளர் தகவல் அளித்துள்ளார்.

இஸ்லாமியர்களின் புனித தளமான கிராண்ட் மசூதியில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கிரேன் விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கி 107 பேர் உயிரிழந்ததுடன் 238 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மசூதியில் கட்டுமானப்பணி மேற்கொண்டு வரும் Saudi Binladin Group (அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவரான ஒசாமா பின்லேடன் உருவாக்கிய நிறுவனம்) என்ற கட்டுமானப்பணி நிறுவனத்தின் தலைமை பொறியாளரை நேற்று செய்தியாளர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

அப்போது பேசிய அவர், கிரேன் மிக தரமான முறையில் பாதுகாப்பாகவே பொருத்தப்பட்டிருந்தது. இந்த விபத்து நிகழ்ந்ததில் கட்டுமானப்பணியாளர்களின் தொடர்பு எதுவும் இல்லை. கடவுளின் செயலால் தான் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த விபத்துக்குறித்து மெக்காவின் மதக்குழு பொலிசாரின் முன்னாள் தலைமை பொலிஸ் அதிகாரி பேசியபோது, இந்த விபத்தின் மூலம் கடவுள் நமக்கு ஒரு பரீட்சையை வைக்கிறார் என கருத்து தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த மசூதிக்கு வந்த சவுதி அரேபிய மன்னரான சல்மான், கிரேன் விழுந்தது தொடர்பாக அங்கு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

பின்னர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நபர்களையும் நேரில் சந்தித்து விரைவில் குணமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விபத்து நிகழ்ந்ததற்கு அப்போது வீசிய கடுமையான காற்று தான் என காரணம் கூறப்பட்டாலும், இந்த விபத்து குறித்து தீவிரமான விசாரணை நடத்தப்படும் என மன்னர் சல்மான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 107 பேரை பலிவாங்கிய கிரேன் அருகில் இருந்து சிலர் சிரித்துக்கொண்டே புகைப்படங்கள் எடுத்துக்கொண்டது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

-http://world.lankasri.com