ஜேர்மனியை குறி வைத்து அதிக அகதிகள் செல்வதற்கு காரணம் என்ன? வெளியான புள்ளிவிபரங்கள்

germany_refugees_001பிற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் ஜேர்மனி நாட்டை மட்டும் குறி வைத்து அதிக எண்ணிக்கையில் அகதிகள் புகலிடம் கோரி செல்வதற்கான காரணங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

பிரித்தானியா, ஆஸ்திரியா, பிரான்ஸ் உள்ளிட்ட பிற ஐரோப்பிய நாடுகளை விட ஜேர்மனி மற்றும் ஸ்வீடன் நாடுகளில் புகலிடம் கோர விரும்பும் அகதிகளே மிக அதிகம்.

இதற்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, பிற ஐரோப்பிய நாடுகளை விட ஜேர்மனி மற்றும் ஸ்வீடன் நாடுகள் மட்டும் தான் அதிக அளவில் அகதிகளுக்கு குடியேற்ற அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.

ஸ்வீடன் நாடு மட்டும் ஐரோப்பிய நாடுகளை தவிர பிற நாடுகளிலிருந்து வரும் சுமார் 71 சதவிகித அகதிகளை ஏற்றுக்கொள்ள தயார் என அறிவித்துள்ளது, புலம்பெயர்ந்தவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில், ஸ்வீடன் நாடு மட்டும் தான் ‘புகலிட அனுமதிக்கு விண்ணப்பம் அளித்த அதே நாளிலிருந்து பணிக்கு செல்ல அனுமதி அளிக்கிறது’.

ஜேர்மனியில் புகலிட அனுமதியை கோரி விண்ணப்பம் செய்த நாளிலிருந்து 90-வது நாளில் பணிக்கு செல்லலாம்.

ஆனால், பிரித்தானியாவை ஒப்பிடுகையில் அந்த நாட்டில் புகலிட அனுமதி கோரி சுமார் ஒரு வருடம் வரை காத்திருந்த பிறகு தான் பணிக்கு செல்ல முடியும்.

இதை தவிர, பிற ஐரோப்பிய நாடுகளை விட ஜேர்மனி அகதிகளுக்கு அதிக அளவில் சலுகைகளும் உதவித்தொகையும் வழங்கி வருகிறது.

உதாரணமாக, புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ள ஒரு அகதிக்கு மாதத்திற்கு 346 யூரோ வழங்குகிறது. இந்த வரிசையில், ஸ்வீடன் நாடு மாதத்திற்கு 224 யூரோ வழங்குகிறது.

ஆனால், இந்த இரண்டு நாடுகளை ஒப்பிடுகையில், பிரித்தானியா அரசு மாதத்திற்கு 217 யூரோக்கள் தான் உதவி தொகையாக வழங்குவதால், பெரும்பாலான அகதிகள் ஜேர்மனி நாட்டையே குறி வைத்து புகலிடம் கோரி செல்கின்றனர்.

நேற்றைய தினம் வெளியான புள்ளிவிபரத்தில், ஐரோப்பிய நாடுகளிலேயே ஜேர்மனி நாட்டிற்கு இவ்வாண்டு சுமார் 80 ஆயிரம் அகதிகள் வருவார்கள் என்பது மேலே குறிப்பிட்டுள்ள புள்ளிவிபரங்களுக்கு ஒரு மிகச்சிறந்த சான்று ஆகும்.

-http://world.lankasri.com