717 பேரை காவு வாங்கிய மெக்கா விபத்து: சவுதி இளவரசர் தான் காரணமா?

mecca_001சவுதி அரேபியாவின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்திற்கு சவுதி இளவரசர் தான் காரணம் என லெபானான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள புனித நகரான மெக்காவுக்கு, ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ‘ஹஜ்’ புனித பயணம் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ‘ஹஜ்’ பண்டிகை, இன்று தொடங்கியது. இருப்பினும முன்னதாகவே, பல நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் மெக்கா நகருக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில்,மினாவில் உள்ள சாத்தான் சுவர் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 717 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

நெரிசலில் சிக்கி காயமடைந்த 863 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியா மற்றும் மலேசியாவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், மினா நகருக்கு வருகை தந்ததை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக, யாத்ரீகர்கள் சென்ற பாதை திடீரென மாற்றப்பட்டதாகவும், இதனால் தான் விபத்து ஏற்பட்டதாகவும் லெபனான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சவுதி இளவரசர் ஒரு பெரிய பரிவாரங்கள் மற்றும் பாதுகாப்பு படையினருடன் வந்ததாகவும், இந்த செய்தியை அந்நாட்டு அரசு மறைப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த குற்றசாட்டை சவுதி அரசு மறுத்துள்ளது.

-http://world.lankasri.com