தாய்மொழிப்பள்ளிகளை ஒழிக்கும் இறுதிக் குறிக்கோள்: அம்னோவுக்கு நன்றி!

 

Lingamதேசியப்பள்ளியில் அமலாக்கம் செய்வதற்காக அரசாங்கம் சமீபத்தில் அறிவித்திருக்கும் இருமொழித் திட்டம் தமிழ்மொழிப்பள்ளிகளுக்குத் தேவையில்லை இல்லை என்ற கருத்து இன்று கோலாலம்பூர், துன் விஸ்மா சம்பந்தனில் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் ஏகமனதாகத் தெரிவிக்கப்பட்டது.

அறிவியல், கணிதம், தகவல் தொடர்பு  மற்றும் வடிவமைப்பு தொழில்நுட்பங்கள் ஆகிய பாடங்களை ஆங்கிலம் மற்றும் மலாய் ஆகிய மொழிகளில் 2016 ஆம் ஆண்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள 300 தேசியப்பள்ளிகளில் கற்பிக்கும் ஒரு முன்னோடி செயல்திட்டத்தை அரசாங்கம் அறிவித்தது. தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகள் அச்செயல்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. ஆனால், அச்செயல்திட்டத்தை தமிழ்ப்பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று கோரும் ஒரு விண்ணப்பத்திற்கு தமிழ்ப்பள்ளி தலைமையாரிசியர்களிடமிருந்து இரகசியமாக கையொப்பம் பெறப்படுவது ஏன் என்று புரியவில்லை என்று இக்கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்த மலேசியத் தமிழ்க் காப்பகத்தின் தலைவர் சு.வை. லிங்கம் கூறினார்.

இச்செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்வதால் விளையப்போகும் தீங்குகளை விவரித்த அவர், இத்திட்டத்திற்கு எதிரான அவரது நிலைப்பாட்டை முன்பே விவேகனந்தா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற ஒரு விளக்கக்கூட்டத்தில் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.

 கேட்க ஆள் இல்லாத நிலை

தமிழ்க் காப்பகத்தின் துணைத் தலைவர் முனைவர் எஸ். குமரன் தமிழ்ப்பள்ளிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைப் பற்றி கேட்க ஆள் இல்லாத சூழ்நிலையில் நாம் இருக்கிறோம் என்றார்.

மலாய்மொழி மற்றும் மலாய் இலக்கியம் சார்ந்த 15 அமைப்புகள் இணைந்து உருவாக்கியுள்ள இருமொழிக் கொள்கை எதிர்ப்புக் குழு மற்றும் சீன அமைப்பான டோங் ஸோங் ஆகியவற்றைக் குறிப்பிட்ட குமரன், நமக்கு அப்படி ஏதும் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டினார். நாம் இச்செயல்திட்டத்தை எதிர்க்கிறோம், ஆனால் அது அரசாங்கத்தையோ அமைச்சரவையையோ எதிர்க்கும் நோக்கம் கொண்டதல்ல என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

இக்கலந்துரையாடலில் பங்கேற்றவர்களில் பலர் தமிழ் அறவாரியம் இச்செயல்திட்டத்திற்கு எதிராகத் தெரிவித்துள்ள அதன் நிலைப்பாட்டை பாராட்டினர்.

கடந்த வியாழக்கிழமை தமிழ் அறவாரியம் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் இருமொழி மற்றும் மலாய்மொழி பாடத்திட்டத்தை தேசிய மற்றும் தாய்மொழிப்பள்ளிகளில் சமமானதாக்குதல் ஆகிய இருசெயல்திட்டங்களையும் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அறிவித்திருந்தது.

“தாய்மொழிப்பள்ளிகளில் அறிவியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை ஆங்கிலத்தில் போதிப்பதை அனுமதிப்பதின் மூலம்Tamil foundation logo தாய்மொழிப்பள்ளிகள் அவற்றின் தனித்தன்மையைப் பறிகொடுக்க நேரிடும் என்பதோடு அவை காலப்போக்கில் ஆங்கிலப்பள்ளிகளாக மாற்றப்பட்டு பின்னர் தேசியப்பள்ளிகளாக்கப்படும். இப்படியும் அரசாங்கம் தாய்மொழிப்பள்ளிகளை ஒழிக்கும் அதன் இறுதிக் குறிக்கோள் நோக்கத்தை நிறைவேற்ற முடியும் என்பது தமிழ் அறவாரியத்தின் கணிப்பாகும்”, என்று தமிழ் அறவாரியம் இருமொழித் திட்டம் பற்றி அதன் நிலைப்பாட்டைத் தெரிவித்திருந்தது.

இக்கலந்துரையாடலில் பேசிய தமிழ் அறவாரியத்தின் உதவித் தலைவர் ஆர். சுப்ரமணியம், நமக்கு கொடுக்கப்படாத ஒன்றுக்கு ஏன் கெஞ்ச வேண்டும் என்று வினவினார்.

ம. மன்னர் மன்னன் இச்செயல்திட்டத்தால் ஏற்படப்போகும் பின்விளைவுகளைப் பட்டியலிட்டு அதனை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று வாதிட்டார். நமது போராட்டம் தமிழ்ப்பள்ளியைக் காப்பாற்றுவது, அரசாங்கத்தை எதிர்ப்பதல்ல என்றும் அவர் கூறினார்.

மலேசியத் திராவிடக் கழகத்தின் தலைவர் இச்செயல்திட்டத்தை கடுமையாகச் சாடினார்.

 அம்னோவுக்கு நன்றி!

தமிழ் மற்றும் சீனமொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்பது அம்னோவின் இறுதிக் குறிக்கோள். அக்குறிக்கோளை சட்டத்தின் மூலம் நிறைவேற்ற அம்னோவின் அன்றையக் கல்வி அமைச்சர் அப்துல் ரசாக் எடுத்துக்கொண்ட நடவடிக்கை சீன சமூகத்தின் கடும் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. ஆனால், அந்த இறுதிக் குறிக்கோள் இன்று வரையில் பின்பற்றப்பட்டு வருகிறது என்று கலந்துரையாடலில் பேசிய ஒருவர் கூறினார்.

umnologoஇப்போது அந்த இறுதிக் குறிக்கோளை பெற்றோர்கள் மூலம் அடையும் திட்டத்தை   அம்னோவின் ஆதிக்கத்திலுள்ள பாரிசான் அரசாங்கம் அதன் மலேசியப் பெருங்கல்வித் திட்டம் 2013-2025 இல் இணைத்துள்ளது. தேசியப்பள்ளியைப் பெற்றோர்களின் முதன்மைத் தேர்வு பள்ளியாக்கும் இறுதிக் குறிக்கோளை அடைவதற்கு தேவையான அனைத்தையும் கல்வி அமைச்சு மேற்கொள்ளும் என்று அப்பெருந்திட்ட அறிக்கை பாகம் 7-17 இல் கூறப்பட்டுள்ளதையும், அதனை அடைவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றுதான் இந்த இருமொழிச் செயல்திட்டம் என்றாரவர்.  தாய்மொழிப்பள்ளிகளை ஒழிப்பதற்கான அதன் இறுதிக் குறிக்கோளை அம்னோ இரகசியமாகச் செயல்படுத்தாமல், திடீரென்று தாக்காமல், பகிரங்கமாக அறிவித்து, அதனை மக்களுக்கு அடிக்கடி நினைவுறுத்தி வருகிறது.    இப்பகிரங்க போக்கிற்காக தாம் அம்னோவுக்கு நன்றி கூறுவதாக அவர் கூறினார்.

இது குறித்து அம்னோ தலைவர்கள் மேற்கொள்ளும் நடவாடிக்கைகளை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.Satu-sekolah-untuk-semua-logo அம்னோவின் இந்த இறுதிக் குறிக்கோளை அமல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கும் பாரிசான் அரசாங்கத்தை நாம் எதிர்க்க வேண்டு,ம். வாக்காளர்கள் எதிர்க்க வேண்டும். இல்லையேல், தாய்மொழிப்பள்ளிகள் மூடப்பட வேண்டும் அம்னோவின் இறுதிக் குறிக்கோள் வெற்றிக்கு நாம்தான் பொறுப்பேற்க வேண்டும் என்றாரவர்.

இறுதியில், ஒன்பது காரணங்களை முன்வைத்து “மலாய்மொழி மற்றும் மலாய் இலக்கியம் சார்ந்த 15 இயக்கங்கள் இணைந்து உருவாக்கியுள்ள இருமொழிக் கொள்கை எதிர்ப்புக் குழு (Badan Bertindak Menentang Program DLP & HIP), சீனக் கல்வியாளர்கள் அமைப்பு (Dong Zong), மலேசியத் தமிழ்க் காப்பகம், தமிழ் அறவாரியம் ஆகிய அமைப்புகள் மிக மிக உறுதியாக எதிர்க்கும் இந்த இருமொழிக் கொள்கையை மலேசியக் கல்வி அமைச்சு உடனடியாகக் கைவிட வேண்டும்”, என்ற முடிவு எடுக்கப்பட்டது.