நஜிப் அதிர்ஷ்டக்காரர் , பெரிய மனசுக்காரர்: ரபிஸி கிண்டல்

fairyபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்கின்  அதிர்ஷ்டம்  அவருக்கு ரிம2.03 பில்லியன்  கிடைத்தது;  அவரது  பெரிய  மனசு  அதைத்  திருப்பிக்  கொடுத்து  விட்டது  என  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி  கிண்டலடித்தார்.

மலேசிய  ஊழல்தடுப்பு  ஆணையத்தின்  விசாரணை  அறிக்கைகளின்  அடிப்படையில்   பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்மீது  குற்றச்சாட்டு  எதுவும்  சுமத்தப்படாது  எனச்  சட்டத்துறைத்  தலைவர்  முகம்மட்  அபாண்டி  அலி  அறிவித்திருப்பது  பற்றி  ரபிஸி  கருத்துரைத்தார்.

பணத்தைக்  கொடுத்த  சவூதி  அரச  குடும்பத்தினரிடமே  நஜிப் அதைத்  திருப்பிக்  கொடுத்து  விட்டார்  என்பதால்  அதன்மீதான  விசாரணை  முடிவுக்கு  வருவதாக  முகம்மட்  அபாண்டி  கூறி இருந்தார்.

“இதை  நஜிப்  முன்பே  சொல்லி  இருந்தால் பிரச்னை  இழுத்துக்கொண்டு  சென்றிருக்காதே”, என  ரபிஸி  கூறினார்.

“ரிம2.6 பில்லியன்  கிடைத்த நஜிப்  மிகப்  பெரிய  அதிர்ஷ்டசாலி.  அதேவேளை  அவருடைய  நல்ல  மனசு  அதில் ஒரு பகுதியைத்  திருப்பிக்  கொடுத்து  விட்டது.  இதெல்லாம்  கதைகளில்தான்  நடக்கும்,  உண்மை  வாழ்க்கையில்  அல்ல”, என்றாரவர்.