அமெரிக்கா – மெக்சிக்கோவுக்கு இடையிலான மோதல் கடும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்

அமெரிக்காவுக்கும் மெக்சிக்கோவுக்கும் இடையிலான ராஜதந்திர மோதல்கள் தீவிரமடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் 2000 மைல் நீளத்துக்கு பாரிய தடுப்பு சுவர் ஒன்றை அமைக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிறைவேற்று உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.

அத்துடன் இந்த சுவருக்கான செலவினை மெக்சிகோவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.எனினும் இந்த செலவினத்தை பொறுப்பேற்க மெக்சிகோவின் ஜனாதிபதி மறுப்பு தெரிவித்திருந்தார்.இதனை அடுத்து இந்த வாரம் அவர் அமெரிக்காவுக்கு மேற்கொள்ளவிருந்த விஜயத்தின் போது, தம்மை சந்திக்க வேண்டாம் என்று ட்ரம்ப் அறிவித்தார்.

இந்த நிலையில் மெக்சிகோவின் ஜனாதிபதி தமது அமெரிக்க விஜயத்தை ரத்து செய்துள்ளார். தற்போது மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு விசேட வரி ஒன்றை விதித்து, அதனை எல்லைச் சுவர் அமைக்க பயன்படுத்திக் கொள்ள டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.

-http://www.athirvu.com