குப்பை கிடங்கு விபத்து: பலி எண்ணிக்கை 113 ஆக அதிகரிப்பு

kuppaiஎத்தியோப்பிய நாட்டில் குப்பை கிடங்கு சரிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எத்தியோப்பிய தலைநகரான அடிஸ் அபபாவில் தான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நகரில் உள்ள 4 மில்லியன் மக்கள் பயன்படுத்தும் குப்பைகள் அனைத்தும் Koshe என்ற ஒதுக்குப்புறமான இடத்தில் கொட்டி சேகரிக்கப்படும்.

தலைநகரில் வீடு இல்லாத ஏழைகள் குப்பைகள் கொட்டப்படும் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

மேலும், குப்பைகளில் கிடக்கும் தேவையான பொருட்களை சேகரித்து அவற்றை விற்பனை செய்து அதன் மூலம் தங்களது வாழ்க்கையை நகர்த்தி வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று மலை போல் கொட்டி வைக்கப்பட்டிருந்த குப்பை மேடுகள் திடீரென சரிந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை 113 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், விபத்து நிகழ்ந்தபோது இப்பகுதியில் 150 பேர் இருந்ததால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

விபத்திற்கு பிறகு சுற்றுப்புறத்தில் இருந்த 350 பேர் உடனடியாக மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகள் தற்போது இரவும் பகலுமாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

மேலும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எத்தியோப்பிய அரசு கடந்த 3 நாட்களாக நாடு முழுவதும் துக்கம் அனுசரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com