குடும்பிமலை முருகன் ஆலயத்திற்குச் செல்ல தடை! தலையிட்ட பிரிகேடியர்

மட்டக்களப்பு கிரான் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள குடும்பிமலை முருகன் ஆலயத்துக்குச் செல்ல இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டதாக குறித்த பிரதேச பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாலயத்தில், வருடாந்தம் பிரதேச மக்களால் திருவிழா மேற்கொள்ளப்படுவது வழமை. இம்முறை அங்கு திருவிழா மேற்கொள்ளச் சென்ற மக்களுக்கு, குடும்பிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமின் அதிகாரிகளால், தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மேற்படி இடத்தில் யுத்த காலத்தின் பின்னர் பௌத்த வணக்கஸ்தலம் அமைக்கப்பட்டு, வெசாக் பௌர்ணமி தினக் கொண்டாட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆனால், அங்கு முருகன் ஆலயத்துக்குச் செல்வதற்கு, ஆலய நிர்வாகத்தினருக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் தரவையிலுள்ள உயர் இராணுவ அதிகாரி இராணுவ முகாமின் அதிகாரி பிரிகேடியர் குலதுங்கவுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து பின்னர் அந்த அதிகாரியின் நெறிப்படுத்தலின் பேரில், தடை நீக்கப்பட்டு, முருகன் ஆலயத்துக்குச் செல்லவும் உற்சவத்தை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டது.

மேலும், இனிமேல் இவ்வாறான தடைகள் இடம்பெறாது எனவும் ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு வருத்தத்தைத் தெரிவிப்பதாகவும் பிரிகேடியர் குலதுங்க பொதுமக்களிடம் தெரிவித்திருந்துள்ளார்.

-tamilwin.com

TAGS: