கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்கு லண்டனில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகமான dailymail தகவல் வெளியிட்டுள்ளது.
லண்டனில் அமைந்துள்ள 24 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாதவை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளதாக லண்டன் பெரு நகர பொலிஸார் அறிவித்துள்ளனர். எனினும் உயிரிழப்புகள் பல மடங்கு அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தொகுதியின் அறையொன்றில் 42 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்தள்ளது.
தீயணைப்பு படை வீரர் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த செய்தி வெளியாகி உள்ளது.
அந்த கட்டடத்தில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்காக கடந்த நாட்களாக தொடர்ந்து மீட்பு குழுவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எரிந்த கட்டடத்திற்கு முன்னால் நின்று பெயர் குறிப்பிடப்படாத நபர் ஒருவர் பேசும் காணொளி ஒன்று இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
https://youtu.be/W-R2ZdHw3Rw
அந்த காணொளியில், “தீயணைப்பு பிரிவில் வேலை செய்யும் நண்பர் ஒருவர் புதிதாக எனக்கு கிடைத்தார். அவர் நேற்று என்னிடம் தொலைபேசி ஊடாக பேசினார். கட்டடத்தின் அறை ஒன்றில் 42 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
அனைத்தும் மறைக்கப்படுகின்றது. அது யாருக்கும் தெரியாது. நாங்கள் சகோதரர்கள் போன்றவர்கள். அவர் ஒரு தீயணைப்பு வீரர். எனினும் அவரால் எல்லோரிடமும் அதனை கூற முடியாது.
அவரால் வெளியே வர முடியாது. எனினும் 42 சடலங்கள் அறை ஒன்றில் உள்ளதாக அவர் கூறினார். சிறுவர்கள் முதல் வயோதிபர்கள் வரையில் அந்த சடலங்களுக்குள் அடங்குவதாக அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை குறிப்பிடத்தக்க அளவு உயிரிழப்புகளை பொலிஸார் உறுதி செய்துள்ளனர். எனினும் இந்த தகவலை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது, பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்வதாக லண்டன் தீயணைப்பு பிரிவு பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
சோதனையின் போது எண்கள் அல்லது தகவல் தொடர்பில் ஆலோசனை வழங்க முடியாது என பொலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய வரலாற்றில் மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆனால் குடியிருப்பாளர்களாலும், உள்ளூர் மக்களாலும், இதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம் என கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

-tamilwin.com
























