டிரம்ப்பின் ஆலோசனைகளைப் பின்பற்றினால் பேரழிவு!

donald-trump_orderedஅமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வடகொரியா கடுமையாக சாடியுள்ளது.

அமெரிக்காவின் வெர்ஜீனியா பல்கலைக்கழக மாணவரான ஒட்டோ வார்ம்பியர் (22) கடந்தாண்டு வடகொரியாவுக்கு பயணம் செய்தபோது, அந்நாட்டு அரசால் உளவு குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்பின், அரசின் பிரச்சார சுவரொட்டியை திருட முயன்ற குற்றச்சாட்டில் 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் வாம்பியரின் உடல்நிலை மோசமாகி கோமா நிலைக்கு சென்றதால், கடந்த வாரம் விடுவிக்கப்பட்டார்.

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்த வாம்பியர் சில தினங்களுக்கு முன் இறந்தார். வாம்பியரின் இறப்புக்கு வடகொரிய அரசின் கொடூர சித்ரவதைகளே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இதனைத்தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், வடகொரியா நாட்டில் காட்டுமிராண்டித்தனமான ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டி வந்தார்.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று வடகொரியா கடுமையாக சாடியுள்ளது.

வடகொரியாவின் அரசு நாளிதழான சின்மன் செய்தித்தாளில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில் கூறியுள்ளதாவது “அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சொந்த நாட்டில் கடினமான சூழ்நிலையில் உள்ளார்.

உள்நாட்டு அரசியல் விமர்சனங்களை திருப்புவதற்காக வடகொரியா மீது முன்னெச்சரிக்கை தாக்குதல் நடத்தும் யோசனையை அவர் கையாள்கிறார்.

மனநிலை பாதிக்கப்பட்ட டிரம்பின் ஆலோசனைகளைப் பின்பற்றினால், அது பேரழிவிற்குதான் கொண்டுசெல்லும் என்பதை தென்கொரியா உணர வேண்டும்” எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– Maalai Malar