அமெரிக்காவை வடகொரியா கடுமையாக வெறுக்க காரணம் இதுதான்

சர்வதேச அளவில் பல்வேறு அமைதி பேச்சுவார்த்தைக்கு பின்னரும் கடந்த 60 ஆண்டுகளாக எதிரி நாடுகளாக அமெரிக்காவும், வட கொரியாவும் திகழ்ந்து வருகிறது.

உலக வல்லரசு நாடுகளில் முதன்மையாக திகழும் அமெரிக்காவை வறுமையில் வாடி வரும் வட கொரியா தன்னுடைய முதல் எதிரி நாடாக கருதி வருகிறது.

இந்த வெறுப்புணர்ச்சிக்கு ஆரம்ப புள்ளி வைத்தது 1950-ம் ஆண்டில் நிகழ்ந்த ‘கொரியா யுத்தம்’ தான்.

 

 

ஒரே நாடாக திகழ்ந்த கொரியா கடந்த 1948-ம் ஆண்டு வட கொரியா மற்றும் தென் கொரியா என இரு நாடுகளாக பிரிந்தது.

வட கொரியாவிற்கு ரஷ்யா மற்றும் சீனாவும், தென் கொரியாவிற்கு அமெரிக்காவும் ஆதரவு அளித்தது.

இந்நிலையில், வட கொரியாவின் முதல் சர்வாதிகாரியான Kim Il-sung என்பவர் தென் கொரியாவை அடிமைப்படுத்த அந்நாட்டின் மீது 1950-ம் ஆண்டு போர் தொடுத்தார்.

வட கொரியாவிற்கு ரஷ்யாவும், சீனாவும் ஆதரவு அளித்தது.

வட கொரியாவின் அத்துமீறிய நடவடிக்கை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ஹரி ட்ரூமனுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

’ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதரவு பெற்ற வட கொரியா, தென் கொரியாவை வீழ்த்திவிட்டால் அடுத்தடுத்த அண்டை நாடுகள் மீது போர் தொடுத்து தங்களது எல்லையை விரிவுப்படுத்தி விடுவார்கள். இதனை முற்றிலுமாக தடுக்க வேண்டும்’ என திட்டமிட்டு தென் கொரியாவிற்கு ஆதரவாக வட கொரியா மீது அமெரிக்கா முதன் முதலாக போர் தொடுத்தது.

1950 முதல் 1953 வரை நிகழ்ந்த கொரியா யுத்தத்தில் சுமார் 20 மில்லியன் பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் வட கொரியா நாட்டை சேர்ந்தவர்கள்.

1953-ம் ஆண்டு அமெரிக்கா முன்னிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டாலும், கொரியாவில் இன்றளவும் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

அமெரிக்காவின் தலையீட்டால் பெரும் உயிரிழப்பையும், பொருளாதார இழப்பையும் வட கொரியா இழந்ததால் அமெரிக்காவை தனது முதல் எதிரி நாடாக எண்ண தொடங்கியது.

அமெரிக்காவின் ஏகாதிபத்திய போக்கை எதிர்த்து வட கொரியா தற்போது வரை போராடி வருகிறது.

‘அமெரிக்கா நமது முதல் எதிரி நாடு. அமெரிக்காவை ஒழிக்கும் வரை நாம் ஓயக்கூடாது’ என வட கொரியாவில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

உலக வல்லரசு நாடுகளில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகளும் முன்னணியில் உள்ளன.

ஆனால், இந்த 3 நாடுகளும் ஒவ்வொரு நாட்டிற்கு எதிரி நாடாகவே திகழ்ந்து வருகிறது.

அமெரிக்காவை பொறுத்தவரை ரஷ்யாவும், சீனாவும் எதிரி நாடுகள் தான். இதுபோன்ற ஒரு சூழலில் ரஷ்யாவும் சீனாவும் வட கொரியாவிற்கு ஆதரவாக உள்ளது அமெரிக்காவை மேலும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

வறுமையில் வாடி வரும் வட கொரியா அமெரிக்காவை எதிர்ப்பதற்கு ரஷ்யாவும் சீனாவும் தனக்கு பின்னால் இருக்கின்றன என்ற துணிச்சலும் ஒரு காரணம் தான்.

‘அமெரிக்கா மீது வட கொரியா போர் தொடுத்தால் நாங்கள் நடுநிலையை கடைப்பிடிப்போம். ஆனால், வட கொரியா மீது அமெரிக்கா போர் தொடுத்தால், அதனை தடுத்து முறியடிப்போம்’ என சீனா சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்தது வட கொரியாவிற்கு மேலும் தைரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா, வட கொரியா ஆகிய இரு நாடுகளுக்கு மத்தியில் போர் ஏற்பட்டால் மூன்றாம் உலகப்போர் நிகழ்வது உறுதி.

மேலும், மூன்றாம் உலகப்போர் ஏற்பட்டால் இதற்கு முந்திய போர்களை விட கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

அமெரிக்கா, வட கொரியா நாடுகளுக்கு மத்தியில் உள்ள 60 ஆண்டுகால பகையை அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்தால் மட்டுமே மூன்றாம் உலகப்போரை தடுக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

-lankasri.com