மானுஸ் தீவு: மூடப்படும் அகதிகள் தடுப்பு முகாம் – வெளியேற அகதிகள் மறுப்பு

ஆஸ்திரேலியாவினால் பப்புவா நியூ கினியாவில் (PNG) நடத்தப்படும் அகதிகள் தடுப்பு முகாம் மூடப்படுவதையடுத்து அகதிகளை வெளியேற்றுவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கை அங்கு தொடங்கியுள்ளது.

படகுகளில் ஆஸ்திரேலியாவுக்கு வரும் அகதிகளை அந்நாட்டு அரசாங்கம் பப்புவா நியூ கினியாவில் உள்ள மானுஸ் தீவு மற்றும் பசிபிக்கில் உள்ள சிறிய நாடான நவ்ரூவில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வந்தனர்.

பப்புவா நியூ கினியாவின் நீதிமன்றம் அங்கு அகதிகள் முகாம் செயல்படுவது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்ததையடுத்து மானுஸ் தீவிலுள்ள அகதிகள் முகாம் செவ்வாய்க்கிழமை அன்று மூடப்படுகிறது.

தாங்கள் தண்ணீர், மின்சாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பயன்படுத்துவது தடுக்கப்படுவதன் மூலம் மனித உரிமைகள் மீறப்படுவதாக கைது செய்யப்பட்டுள்ள அகதிகள் வாதிடுகின்றனர். பலர் அங்கிருந்து வெளியேறுவதற்கு மறுக்கின்றனர்.

அகதிகள் முகாமியுள்ள குடிநீர், மின்சாரம் மற்றும் உணவு ஆகியவை வழங்கப்படுவது மாலை 5 மணியிலிருந்து நிறுத்தப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். மேலும், பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அன்றே முகாமிற்குள் நுழைவார்கள் என்று தெரிகிறது.

கைதிகள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், குடிநீர் மற்றும் உலர்ந்த பிஸ்கட்டுகள் போன்றவற்றை சேமித்து வைக்க ஆரம்பித்ததுடன், தற்காலிக மழைநீர் சேமிப்பு பகுதிகளையும் நிறுவியுள்ளதாக அங்குள்ள அகதிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமையன்று பாதுகாப்பு அதிகாரிகள் முகாமிலிருந்து சென்றவுடன் அங்குள்ள உள்ளூர் வாசிகள் மதில்களை சூறையாட தொடங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா தனது நாட்டுக்கு படகுகளின் மூலம் அதிகாரப்பூர்வமற்ற வகையில் நுழையும் அகதிகளை ஒரு சர்ச்சைக்குரிய கொள்கையின் படி ஏற்றுக்கொள்வதற்கு மறுக்கிறது. அவ்வாறு தடையை மீறி வரும் அனைவரும் நவ்ரூ மற்றும் மானுஸ் தீவிலுள்ள தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்படுகின்றனர்.

-BBC_Tamil