நியூ யார்க் தாக்குதல் : பாதுகாப்பை பலப்படுத்த டிரம்ப் உறுதி

நியூ யார்க் டிரக் தாக்குதலுக்கு பிறகு, உள்நாட்டு பாதுகாப்புத்துறையிடம் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

மான்ஹாட்டன் பகுதியில், சைக்கிள்கள் செல்லும் பாதையில், டிரக் ஓட்டுநர், சைக்கிளில் சென்றவர்கள் மீது ஏற்றியதில், குறைந்தது 8 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 11 பேர் காயமடைந்துள்ளனர்.

2010 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் குடியேறியவரான சய்ஃபுல்லோ சாய்போவ், வெள்ளை நிற டிரக்கில் இருந்து இறங்கிய போது, காவல்துறையால் சுட்டு கைது செய்யப்பட்டார்.

அவரது வாகனத்தில் இஸ்லாமிய அரசு என தம்மை அழைத்துக்கொள்ளும் குழுவை குறிப்பிடும் வகையிலான விவரங்கள் இருந்ததாக, சட்ட அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கூறினார் என்று சி.பி.எஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

சுடப்பட்ட அந்த ஓட்டுநர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். -BBC_Tamil