ஜிம்பாப்வே நெருக்கடி: வீட்டுக்காவலில் இருந்தவாறே பேச்சுவார்த்தை நடத்தும் முகாபே

ஜிம்பாப்வேவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ராணுவத்தினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கும் முகாபே மற்றும் ராணுவ தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தென் ஆஃப்பிரிக்கா அரசாங்கத்தின் அமைச்சர்கள் தலைநகர் ஹராரேவில் முகாமிட்டு இருக்கிறார்கள்.

ஜிம்பாப்வேவை 37 ஆண்டுகள் ஆட்சி செய்து, இப்போது வீட்டுச் சிறையில் இருக்கும் முகாபேவின் எதிர்காலம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்ட அவர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

முகாபே தனது பதவியை ராஜினாமா செய்ய எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

தென் ஆஃப்பிரிக்க வளர்ச்சி குழு மற்றும் ஆஃப்பிரிக்க ஒன்றியம், ராணுவ ஆட்சியை ஆதரிப்பதைவிட, அரசியல் அமைப்புச்சட்டத்தின்படி ஒரு தீர்வு காண வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.

ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவின் அதிகாரத்தை கைப்பற்றி அவரை ராணுவம் தடுப்புக்காவலில் எடுத்துள்ளது ஆகியவை ஆட்சிக்கவிழ்ப்பு நடவடிக்கை போன்றே தோன்றுகிறது என்று ஆஃப்ரிக்க யூனியன் கருத்து தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் ஆல்பா கோண்ட், நாட்டில் அரசியலமைப்பு நிலை உடனடியாக திரும்ப ஆஃப்ரிக்கா யூனியன் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜிம்பாப்வே ராணுவமோ, ஆட்சிக்கவிழ்ப்பை நடத்தவில்லை என்றும், அதிபர் முகாபே பத்திரமாக இருப்பதாகவும், அவரை சுற்றியுள்ள குற்றவாளிகளை எதிர்த்து நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

முகாபேவுக்கு அடுத்து அதிபர் பதவியில் யார் வருவார்கள் என்ற அதிகார மோதல் ஏற்பட்டதையடுத்து ராணுவம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

கடந்த வாரம் ஜிம்பாப்வேயின் துணை அதிபர் எம்மர்சன் மனங்கேக்குவா பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவரது நீக்கம், முகாபேவின் மனைவி கிரேஸ் அதிபர் பதவிக்கு வருவதற்கான சூழ்நிலையை உருவாக்கியது. அதே சமயம், ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் தாங்கள் ஓரங்கட்டப்படுவதை போன்று உணரும் சூழலுக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

1980களில் பிரிட்டனிடமிருந்து ஜிம்பாப்வே விடுதலை பெற்றதிலிருந்து நாட்டின் அரசியலில் ஆதிக்கம் செலுத்து வருகிறார் 93 வயதாகும் அதிபர் முகாபே. -BBC_Tamil