ஜெருசலேம் விவகாரம்: இஸ்ரேல்-பாலத்தீன மோதல், கண்ணீர் புகை வீச்சு

சர்வதேச எதிர்ப்புகளை மீறி, சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேல் தலைநகரம் என்று அமெரிக்கா அறிவித்ததை அடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை, காசா போன்ற பகுதிகளில் இஸ்ரேலியர்களுக்கும், பாலத்தீனர்களுக்கும் மோதல் மூண்டுள்ளது. இஸ்ரேல் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இந்த மோதல்களில் 31 பாலத்தீனர்கள் காயமடைந்தனர். இவர்களில் ஒருவர் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பாலத்தீனியர்கள் போராட்டம் நடத்துவதற்காக வீதிக்கு வந்ததால், அங்கு நூற்றுக்கணக்கான கூடுதல் துருப்புகளை அனுப்பியது இஸ்ரேல். போராட்டக்காரர்கள் டயர்களைக் கொளுத்தினர், கற்களையும் வீசினர். இஸ்ரேல் துருப்புகள் அவர்கள் மீது ரப்பர் குண்டுகளை சுட்டதுடன், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர்.

காசா பகுதியில் இருந்து இஸ்ரேலை நோக்கி இரண்டு ராக்கெட்டுகள் வீசப்பட்டதாகவும் ஆனால் அவை பாதியிலேயே விழுந்துவிட்டதாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. காசாவில் எல்லையைத் தாண்டி பாலத்தீனர்கள் கற்களை வீசியதாகவும், பதிலுக்கு இஸ்ரேல் சிப்பாய்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜெருசலேமினை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்கா ஏற்றுக்கொண்டதை அதன் பல நட்பு நாடுகளே ஏற்றுக்கொள்ளவில்லை. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அரபு லீகும் சில நாள்களில் கூடி தங்கள் நிலைப்பாட்டினை தெரிவிக்கவுள்ளன. கிளர்ச்சி நடத்துமாறு ஏற்கெனவே ஹமாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. -BBC_Tamil