இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிப்பதனால் அமைதி உருவாகும் சாத்தியம் ஏற்படும்: நேதன்யாஹு

பிரஸ்செல்ஸ்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த வாரம் ஜெருசலேம் நகர் இஸ்ரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார்.

இதற்கு பாலஸ்தீனிய பகுதிகளில் கடும் எதிர்ப்பு கிளம்பியதுடன் பல்வேறு போராட்டங்களும் தொடர்ச்சியாக நடந்தன.

இந்த நிலையில், டிரம்பின் அறிவிப்பு பற்றி பேசிய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹூ, இதனால் அமைதி கெடாது.  இது அமைதி உருவாகும் சாத்தியத்தினை ஏற்படுத்தும்.  ஏனெனில் உண்மையை அங்கீகரிப்பது என்பது அமைதியின் பொருள்.  அதுவே அமைதியின் அடிப்படையாகும் என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர், அமெரிக்க நிர்வாகம் ஒரு புதிய அமைதிக்கான ஒப்புதலை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.  எனவே நாம் அதுவரை அமைதி காக்க வேண்டும் என நினைக்கிறேன்.  என்ன வர போகிறது என்பதற்காக நாம் காத்திருப்போம் என அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு புதிய ஒப்புதலை உருவாக்கும் பணியில் டிரம்பின் மருமகன் மற்றும் மூத்த ஆலோசகரான ஜரேட் குஷ்னர் ஈடுபட்டுள்ளார்.  ஆனால் என்ன திட்டத்தினை அவர் மேற்கொண்டு வருகிறார் என வெளியிடப்படவில்லை.

-dailythanthi.com