அமெரிக்காவில் சாலையில் கவிழ்ந்த ரயில் பெட்டிகள்: பலர் இறப்பு

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ரயில் பெட்டிகள் சாலையில் கவிழ்ந்ததால் பலர் இறந்துள்ளனர் என போலீஸ் கூறுகிறது. டஜன் கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.

ரயில் தடம் புரண்டதால், ரயில் பாதைக்கு கீழ் இருந்த ஐ-5 தேசிய நெடுஞ்சாலையில் ரயில் பெட்டிகள் கவிழ்ந்தது.

அவசர சேவைகள் மக்களுக்கு சாலையில் வைத்து சிகிச்சை அளிப்பதை சம்பவ இடத்தில் இருந்து வந்துள்ள காட்சிகள் காட்டுகின்றன. குறைந்தது 4 பெட்டிகள் தடம் புரண்டதாக தெரிகிறது. இதில் ஒன்று தலைகீழாக நெடுஞ்சாலையில் விழுந்துள்ளது.

இதனால் நெடுஞ்சாலையில் பல கார்கள் சிக்கியுள்ளன.

ரயிலில் பயணிதவர்கள் பலர் இறந்துள்ளனர். வாகனத்தில் வந்தவர்கள் யாரும் இறக்கவில்லை என அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.

தீயணைப்பு துறையினர் ரயிலில் சிக்கியிருந்த மக்களை மீட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சுமார் 78 பயணிகளும், ஐந்து பணியாளர்களும் ரயிலில் பயணித்ததாக தெரிகிறது.

விபத்து ஏற்படுவதற்கு முன்பு ரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது. -BBC_Tamil